கொரோனா பயத்திலிருந்து சற்று மீண்டிருக்கிறோம். ஆனால் எங்கு பார்த்தாலும் காய்ச்சல், சளி, தும்மல், இருமல் என கடந்த சில வாரங்களாகவே சூழல் நம்மை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. வீட்டுக்கு ஒருவராவது உடல்நலமில்லாமல் இருப்பதைக் கேள்விப்படுகிறோம். என்ன காரணம்…?
சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பூங்குழலியிடம் பேசினோம்….
“2022 ஜூலை இறுதியில் தொடங்கி, 2023, ஜனவரி வரையிலுமே சளி, காய்ச்சல், தும்மல், இருமல், காய்ச்சல் இல்லாத சளி, இருமல் பிரச்னைகளுடன் நிறைய மக்கள் மருத்துவமனைகளுக்கு வருவது அதிகரித்திருக்கிறது. அதிலும் கடந்த இரண்டு மாதங்களாக புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை எடுத்துச் செல்லும் நபர்களில் இந்த அறிகுறிகளோடு வருபவர்கள்தான் அதிகம் என்று சொல்லலாம். ‘சீசனல் ஃப்ளு’ எனப்படும் இந்த பாதிப்பு, சென்னை போன்ற நகரங்களில் மழை மற்றும் குளிர்காலங்களில் பரவும். அதாவது ஜூலையில் ஆரம்பித்து ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி ஆரம்பம் வரை தொடர்ந்து இருக்கும். இந்த பாதிப்பானது எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகளையும் பாதிப்பையும் காட்டாது.