பச்சிளம் குழந்தை வளர்ப்பு என்பது, பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதிலும் விரிவாகவும் விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம். புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.
கேள்வி: எனக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக, 38வது வாரத்திலேயே சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். குழந்தை பிறந்த பிறகு, தாய்ப்பால் போதுமான அளவு சுரக்காத காரணத்தால், 3-வது நாளிலிருந்து, தாய்ப்பாலுடன் பவுடர் பாலையும் பாலாடையில் குழந்தைக்கு கொடுக்கும்படி மருத்துவர் அறிவுறுத்தினார்; தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்க ‘Domstal’ என்னும் மருந்தையும் தொடங்கினார். தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்க வேறு என்ன வழிமுறைகள் உள்ளன… தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்கவில்லையென்றால், பவுடர் பால் தான் தர வேண்டுமா? பசும்பால் கொடுக்கக் கூடாதா?
தங்கள் கேள்விக்கு விடையளிக்கும் முன் தாய்ப்பால் சுரப்பு எவ்வாறு நிகழ்கிறதென்பதை விரிவாகக் காண்போம்.
முன்புற பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து (Anterior Pituitary Gland) உற்பத்தியாகும் புரோலாக்டின் (Prolactin) ஹார்மோன் தான், தாயின் மார்பகங்களில் உள்ள பால்சுரப்பிகளில் இருந்து பால் சுரக்க காரணியாகிறது. தாயின் மார்பகத்தை குழந்தை சப்பும்போது, காம்புகளிலுள்ள நரம்புகளிலிருந்து சமிக்ஞைகள் முன்புற பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டி, புரோலாக்டின் ஹார்மோனை சுரக்கச் செய்கின்றன. இந்த புரோலாக்டின் ஹார்மோன் நேரடியாக மார்பகங்களிலுள்ள பால்சுரப்பிகளைத் தூண்டி, தாய்ப்பாலைச் சுரக்கச் செய்கின்றன. இவ்வாறு, தூண்டுதல் முதல் பால் சுரத்தல் வரை நிகழும் சுழற்சியை, புரோலாக்டின் மறிவினை (Prolactin reflex) அல்லது பால் சுரத்திடும் மறிவினை (Milk Secretion reflex) என்பர்.