ஃபார்முலா மில்க் (பவுடர் பால்), தாய்ப்பால் போன்று கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், மினரல்கள் என ஒப்பீட்டளவில் ஒன்றாக இருந்தாலும், தாய்ப்பாலில் குழந்தையை பல்வேறு நோய்களிலிருந்து காப்பாற்றும் பிறபொருளெதிரிகள் (ஆன்டிபாடிகள்), பெருவிழுங்கிகள் (Macrophages), நிணநீர் செல்கள் (Lymphocytes), லேக்டோஃபெரின் (Lactoferrin) மற்றும் இன்டர்ஃபெரான் (Interferon) போன்றவை ஃபார்முலா மில்க் பவுடரில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பவுடர் பால் கொடுக்கப்பட்ட குறைமாத பச்சிளங்குழந்தைகளில், தாய்ப்பால் கொடுக்கப்பட்ட குறைமாத பச்சிளங்குழந்தைகளைக் காட்டிலும் இரு மடங்கிற்கும் அதிகமாக, குடலில் தீவிர நோய் (Necrotizing Enterocolitis) ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தாய்ப்பால், குறைமாத பச்சிளங்குழந்தைகளில் குடலில் தீவிர நோய்க்கெதிராக பாதுகாப்பு தருகிறது.
எனவே, தாய்ப்பால் வங்கி இருக்கும்பட்சத்தில், தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்காத குழந்தைகளுக்கு மருத்துவர்களின் முதல் தேர்வு தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலாகத்தான இருக்குமே தவிர, பவுடர் பால் அல்ல. எனினும், இந்திய அளவில் 90 தாய்ப்பால் வங்கிகளே இருப்பதாலும், தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் கிடைப்பது கடினம் என்பதாலும், தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் இல்லாதபட்சத்தில், பவுடர் பாலை அறிவுறுத்துகிறோம்.