வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
கடந்த வாரம் முழுவதும் நிறைய நிறைய விசேஷங்களுக்கு செல்ல நேர்ந்தது. எல்லா விசேஷங்களிலும் சொல்லி வைத்தாற்போல் தலைவாழை இலை போட்டு விருந்து. செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரம் முழுவதும் தலை வாழை இலையில் சாப்பிட்ட போது கண் முன்னே என் மாமா தான் நினைவுக்கு வந்தார்..
திருமணமான புதிதில் எனது மாமனார் பாடம் சொல்லிக் கொடுத்தது தான் நினைவுக்கு வந்தது. படம் வரைந்து பாகத்தை குறிக்காது தான் பாக்கி.. ஹிஹிஹி… ஆம்… எங்கள் திருமணத்துக்கு வர இயலாத சூழல் எனது மாமியாரின் அண்ணனுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும். (ஒரு அரசியல் கட்சி மரம் வெட்டி போட்டதில் ஊரே அல்லோகலப்பட்ட சமயம்) ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்கள் வருவதாக சொன்னதால், வீட்டிலேயே ஒரு சின்ன விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அனைவரும் மேஜை மீது அமர, தலை வாழை இலைபோட்டு பரிமாற ஆரம்பித்தேன். எடுத்தவுடன் இலையில் சோற்றைப்போட, அருகிலேயே அதைப் பார்த்துக்கொண்டிருந்த என் மாமா, (மாமனார்) இப்படி இல்லை ஆதிரை.. எதை எதை எப்படி பரிமாற வேண்டும் என நான் சொல்கிறேன். நானும் சரி என்று தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல, தலையாட்டிவிட்டு அவர் சொன்னபடி செய்தேன்.
இப்பவும் யார் எங்கள் வீட்டிற்கு வந்தாலும் தலை வாழை இலையில் சாப்பாடு போட்டால் இந்த நினைவு தான் முதலில் நினைவுக்கு வரும்.
மாமா ,கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் அழகாக சொல்லிக் கொடுத்தார்.