தெலுங்கு வசன உச்சரிப்பு என்றால் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்பும் ‘உ’ சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எழுதப்படாத விதியின் அடிப்படையில், ‘ரைட்டுஉஉ, ரைட்டுஊ’ என வில்லன் நஞ்சுண்டா கோபமாகப் பேசுவது நமக்குச் சிரிப்பை மட்டுமே வர வைக்கிறது. ஸ்டன்ட் மாஸ்டர் டான் அசோக் இயக்குநரின் வெரைட்டியாகக் கொலை செய்யும் முயற்சிகளுக்கு உதவியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக இறுதி காட்சியில் கதாநாயகன் செய்யும் கொலை ‘இதுக்கு அந்த வில்லன்களே பரவாயில்லையே’ என யோசிக்க வைக்கிறது. பில்டப் காட்சிகளில் ஜிப்ரானின் பின்னணி இசை ஓகே ரகம். இ.கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவில் சராசரியான பணியைச் செய்துள்ளார். படத்தொகுப்பில் முதல் முப்பது நிமிடங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆர்.சுதர்சன், அதன் பின் அந்த கத்தரியைக் கீழே போட்டுள்ளார்.
இந்த தலைநகரம் யூனிவர்ஸில் காவல்துறை என்ற ஒன்றும் இருக்கவே செய்கிறது. ஆனால், அவர்களும் ரவுடிகளோடு ‘மாமா, மச்சான்’ என்று பேசிக்கொள்ளாத குறைதான். மற்றபடி அவர்களால் படத்தில் எதுவுமே நடக்கவில்லை. அதிலும், நாயகனின் வெற்று வாய் சவடாலுக்கு சிபிசிஐடி-யே பயப்படுவதெல்லாம் ரொம்பவே அநியாயம் பாஸ். இப்படிக் காட்சிகளில் எந்த நம்பகத்தன்மையும் இல்லாமல், திரைக்கதையில் எந்த மெனக்கெடலும் செய்யாமல் வக்கிரமான, வன்முறையான காட்சி அமைப்புகளை மட்டுமே நம்பி நகர்கிறது படம். வில்லன்கள் இறுதிவரை புத்திசாலித்தனமாக எதுவுமே செய்யவில்லை, அதனால் நாயகன் சண்டை மட்டுமே போடுகிறார், போட்டுக்கொண்டிருக்கிறார், இனியும் போடுவார்.