பெங்களூரு : தலித் பெண்ணின் கன்னத்தில் அறைந்த அமைச்சர் சோமண்ணா பதவி விலக வலியுறுத்தி மகளிர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
மாநில வீட்டு வசதி துறை அமைச்சர் வி.சோமண்ணா, நேற்று முன்தினம் சாம்ராஜநகர் மாவட்டம், குண்டல்பேட்டை தாலுகா, ஹங்கல கிராமத்தில் அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சி நல திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, மனு ெகாடுக்க வந்த தலித் பெண் ஒருவரின் கன்னத்தில் அறைந்தார்.
இந்த சம்பவம் மீடியாக்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அமைச்சருக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் ஆவேசமாக குரல் எழுப்பினர். இந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்து விட்டது. இதில் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்வதாக அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார். இருப்பினும் அமைச்சருக்கு எதிராக போராட்டம் குறையாமல் நடந்து வருகிறது. அவர் பதவி விலக வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் கர்நாடக மாநில மகளிர் காங்கிரஸ் சார்பில் அதன் மாநில தலைவர் புஷ்பா அமர்நாத் தலைமையில் பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் பவனில் நேற்று போராட்டம் நடந்தது. இதில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாக எஸ்.மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்றவர்கள், தலித் பெண்ணை கன்னத்தில் அரைந்து அவமதிப்பு செய்துள்ள அமைச்சர் வி.சோமண்ணா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.