சென்னை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பவுலிங் தரவரிசையில் முதலிடத்திற்கு மீண்டும் முன்னேறியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். “தமிழ்நாட்டின் பெருமை” என அஸ்வினை புகழ்ந்துள்ளார் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளில் மொத்தமாக 999 பந்துகளை வீசி 25 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் அஸ்வின். இதன்மூலம் ஐசிசி பவுலர்களின் தரவரிசையில் 869 ரேட்டிங் உடன் முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி, அஸ்வினை பாராட்டியுள்ளார்.
“தமிழ்நாட்டின் பெருமை. கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளார். இதற்கு நீங்கள் தகுதியானவர் மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு உங்களது பங்களிப்பை இது உரக்கப் பேசுகிறது. உங்களது அபார கிரிக்கெட் கேரியரில் இதுபோல மென்மேலும் சாதனைகள் வர உள்ளன” என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
Tamil Nadu’s pride @ashwinravi99 makes us proud by securing the No1 in Test Rankings amongst the bowlers. A well-deserved honour & this speaks volumes of your contribution to Indian cricket. There is more to come in what’s already an illustrious career. pic.twitter.com/cJjKZzLN4B
— Udhay (@Udhaystalin) March 16, 2023