சென்னை: தமிழை காக்கும் போராட்டம் என்ற தலைப்பில் பாஜ சார்பாக மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூரில் நடந்த போராட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். ‘தமிழை காக்கும் போராட்டம்’ என்ற தலைப்பில் தமிழக பாஜ சார்பாக அக்டோபர் 27ம் தேதி (நேற்று) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையை பொறுத்தவரை 7 இடங்களில் போராட்டம் நடந்தது. பெரவள்ளூவரில் நடந்த போராட்டத்தில் மாநில செயலாளர் டால்பின் ஸ்ரீதர் பங்கேற்றார். புரசைவாக்கம் வள்ளலார் தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கராத்தே தியாகராஜன், வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர் வி.பி.துரைசாமி, அம்பத்தூர் ஒ.டி., பஸ் ஸ்டாண்ட் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பால்கனகராஜ், கருநாகராஜன், டோல்கேட் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாராயண திருப்பதியும் பங்கேற்றனர். இதேபோல கந்தன்சாவடி, பனகல் மாளிகை அருகிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
* நிருபர்களிடம் டென்ஷன்
கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்தார். தொடர்ந்து கேள்வி கேட்ட நிருபர்களிடம், என்ன மரத்து மேல குரங்கு தாவற மாதிரி சுத்திச் சுத்தி வர்றீங்க என டென்ஷனாக பேசினார். தொடர்ந்து நாய், பேய், சாராய வியாபாரிக்கெல்லாம் தன்னால் பதிலளிக்க முடியாது எனக்கூறிவிட்டு அண்ணாமலை புறப்பட்டார்.