ஜெர்மனி நாட்டின், மைன்ஸ் பகுதியில் கடந்த ஆண்டு 23 வயதான இளம்பெண் ஒருவர் காணாமல்போனதாக, அவரின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்திருந்தனர். அதையடுத்து, போலீஸாரால் தேடிவரப்பட்ட அந்தப் பெண், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி காரில் சடலமாக மீட்கப்பட்டார். மர்ம மரணம் என வழக்கு பதிவுசெய்த போலீஸார், தங்கள் மகள் காணாமல்போனதாகப் புகார் அளித்தவர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துவிட்டு, உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதன் முடிவில், போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்தச் சடலம் காணாமல்போனதாகக் கருதப்படும் இளம்பெண்ணின் சடலம் இல்லையென்பது தெரியவந்தது.
இந்தத் தகவலால் போலீஸார் திகைப்பில் ஆழ்ந்திருக்க, மாயமான இளம்பெண்ணின் பெற்றோர் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டனர். காணாமல்போன அந்தப் பெண்ணின் முகத்தோற்றமும், இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் முகத்தோற்றமும் ஒரே மாதிரியாக இருந்தது பல சந்தேகங்களை போலீஸாருக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
அதையடுத்து, பல கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீஸார், காணாமல்போனதாகக் கருதப்படும் இளம்பெண்ணை இங்கோல்ஸ்டட் என்ற இடத்தில் மீட்டு, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் அந்தப் பெண்ணைக் கைதும்செய்தனர்.
இந்த வழக்கின் அதிர்ச்சிப் பின்னணியை ஊடகங்களுக்கு விவரித்த அந்தப் பகுதியின் காவல்துறை செய்தித் தொடர்பாளரான ஆன்ட்ரியாஸ் ஆய்ச்சீல், “குற்றம்சாட்டப்பட்ட அந்த 23 வயது இளம்பெண் குடும்பச் சூழல் காரணமாக பிரச்னையில் இருந்திருக்கிறார். அதனால், புதிதாக ஒரு வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று விரும்பிய அவர், தான் இறந்துவிட்டது போல நாடகமாடி, அவர் பெற்றோரை நம்பவைக்கத் திட்டமிட்டிருக்கிறார்.