பட மூலாதாரம், Getty Images
பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்குகிறது.
இதனிடையே பாகிஸ்தான் அரசு விடுத்துள்ள செய்தி ஒன்றில், “பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், பிப்ரவரி 15, 2026 அன்று இந்தியாவுக்கு எதிராக திட்டமிடப்பட்ட போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களமிறங்காது” என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக விளையாடாமல் இருக்க பரிசீலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் இந்த அறிக்கை அதனை உறுதி செய்துள்ளது.
கடந்த வாரம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் உடனான சந்திப்புக்குப் பிறகு, “அனைத்து விருப்பங்களையும் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் தீர்வு காண பிரதமர் உத்தரவிட்டுள்ளார்” என்று கூறினார்.
வங்கதேசத்தை ஆதரித்த பாகிஸ்தான்
பட மூலாதாரம், X/MOHSIN NAQVI
பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேசம் இந்தியாவில் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட மறுத்துவிட்டது, இதனால் அந்த அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து தொடரில் சேர்க்கப்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி ஐசிசியின் முடிவை “தவறானது” என்று கூறி அதை இரட்டை நிலைப்பாடு என்று விவரித்தார்.
“வேறு எந்த நாட்டைப் போலவே வங்கதேசத்துக்கும் அதே விதிகள் பொருந்தும். பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு நாடு வேறொரு நாட்டில் விளையாட மறுத்தால், வங்கதேசத்துக்கும் அந்த உரிமை இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்த சூழ்நிலையில், “வங்கதேசம் நியாயமாக நடத்தப்படாவிட்டால், உலகக் கோப்பைக்காக இலங்கைக்கு ஒரு அணியை அனுப்புவது குறித்து அரசாங்கம் (பாகிஸ்தான்) இப்போது முடிவு செய்யும். ஐசிசி விரும்பினால் 22வது அணியைச் சேர்க்கலாம்” என்று அவர் கூறினார்.
‘இறுதிப் போட்டி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்தால்’
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானின் அறிவிப்பைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் ஏராளமான கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“பாகிஸ்தான் உலகக் கோப்பைக்குச் சென்றாலும் இந்தியாவுடன் விளையாடவில்லை என்றால், ICC-யின் எதிர்வினையைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். சட்ட நிலைமை எனக்குத் தெரியாது, கடந்த கால முன்னுதாரணங்களின் அடிப்படையில் இந்த விஷயம் எவ்வாறு கையாளப்படும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், பாகிஸ்தானின் ICC வருவாய்ப் பங்கிலிருந்து அதன் இழப்புகளை ஈடுசெய்ய ICC ஒளிபரப்பாளரிடம் கேட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இறுதிப் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டியாக இருந்தால் என்ன செய்வது?”
மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தன் எக்ஸ் பக்கத்தில், “பெரிய செய்தி: பாகிஸ்தான் T20 உலகக் கோப்பையில் இந்தியாவுடன் விளையாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. என் கருத்துப்படி, இதற்காக பாகிஸ்தானுக்கு எதிராக ICC நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கதேசம் அதிருப்தி அடைய சில காரணங்கள் இருந்தன, ஆனால் பாகிஸ்தான் ஏற்கெனவே ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்டிருந்தது. இப்போது பின்வாங்க எந்த காரணமும் இல்லை.” T20 உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் எட்டு முறை மோதியுள்ளன. பாகிஸ்தான் ஒரு போட்டியில் வென்றுள்ளது, மீதமுள்ள ஏழு போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பையில், இரு அணிகளும் எட்டு முறை மோதியுள்ளன, பாகிஸ்தான் இந்த எட்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு