தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிகழ்வில் பங்கேற்றார். இந்தப் புதிய தொழில்நுட்பம் குறித்து மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் மருத்துவர் கே.ஆர் பாலகிருஷ்ணன் கூறியது: “இதயம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் பெற்ற 4 மணி நேரத்துக்குள், நோயாளிக்குப் பொருத்தியாக வேண்டும். எல்லா நேரங்களிலும் விமானப் போக்குவரத்து கிடைக்காது. அதுபோன்ற நேரங்களிலும் சாலை வழியாக ஆன்புலன்ஸில் கொண்டு வரும்போது போக்குவரத்து மிகப்பெரிய பிரச்னையாகவே இருக்கிறது.
சென்னையில் ‘க்ரீன் காரிடார்’ எனப்படும் முறையைப் பயன்படுத்திப் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு உடல் உறுப்பைக் கொண்டுசெல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதற்கு வழிவகை செய்யப்படுகிறது. ஆனால் பிற மாவட்டங்களிலிருந்து இதுபோன்ற வசதிகள் இல்லாததால் டிரோன் மூலம் கொண்டுவரும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். தற்போது சோதனை முயற்சியாக சென்னைக்கு 10 கி.மீ தூரத்திலிருந்து கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்திருக்கிறோம். அடுத்தடுத்து தூரத்தை அதிகரிக்கும் முயற்சியிலும் இருக்கிறோம்” என்றார்.