கேரள மாநிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இக்காய்ச்சல் இப்போது பரவ ஆரம்பித்து இருக்கிறது. கொசுக்கள் மூலம் பரவும் இந்தக் காய்ச்சலை கவனிக்காமல் இருந்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

மகாராஷ்டிராவில் இதுவரை மும்பை உட்பட மாநிலம் முழுவதும் 8 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. கோலாப்பூர் அருகில் உள்ள இசல்கரஞ்சி என்ற இடத்தில் அதிகபட்சமாக 5 பேருக்கு இக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டு இருக்கிறது.
மும்பையில் இரண்டு பேருக்கும், புனேயில் ஒருவருக்கும் ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுகாதாரத்துறை இணை இயக்குநர் பிரதாப் சிங் கூறுகையில், ’’ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்கள் யாரும் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் இல்லை. மேலும் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாதவர்களாக இருக்கின்றனர். தொற்று அதிகமாக இருக்கும் இசல்கரஞ்சியிலும் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் இல்லை. ஜிகா வைரஸ் தொற்று இருப்பவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

ஜிகா வைரஸ் குறித்து மும்பை ஃபோர்டீஸ் மருத்துவமனை டாக்டர் அனிதா மேத்திவ் கூறுகையில், ”ஜிகா வைரஸ் கொசுக்கள் மூலம் ஏற்படுகிறது. எனவே அதற்கான சூழலைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் ஜிகா வைரஸ் மட்டுமல்லாது டெங்கு, மலேரியாவையும் தடுக்க முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஜிகா வைரஸ் தொற்று அறிகுறிகளாக லேசான காய்ச்சல், மூட்டு வலி, தலைவலி, உடம்பில் தடிப்புகள் ஏற்படும். கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.