நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததுமே உதயநிதி துணை முதல்வர் ஆக்கப்படுவார் என்றும், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் தி.மு.க வட்டாரத்தில் செய்திகள் அனலடித்தன. ஆனால், சட்டவிரோத பணச் சலவைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்த பிறகு அமைச்சரவை மாற்றம் செய்யலாம் எனத் தலைமை இந்த முடிவுகளைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது. தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் தள்ளிப்போனதோடு ஜாமீன் கிடைப்பதிலும் சிக்கல் எழுந்தது. இதனால் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட செந்தில் பாலாஜி கொஞ்ச காலம் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்ந்தார்.
ஆனால், இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வதைச் சுட்டிக்காட்டி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதைத் தாமதப்படுத்தியது. அதையடுத்து தனது அமைச்சர் பொறுப்பைத் தாமாக முன்வந்து ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, அதாவது 471 நாள்களுக்கு பின் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
அந்த உத்தரவில் செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எந்த விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. இதையடுத்து அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சு மீண்டும் சூடுபிடித்தது. செந்தில் பாலாஜி சிறையிலிருந்து வந்த அடுத்த இரண்டு நாளில் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பும், அதோடு உதயநிதியை துணை முதல்வராக்கியும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.


அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திடும் நிபந்தனை ஜாமீனில் உள்ள ஒருவருக்கு எப்படி மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுக்கலாம் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தாலும், அவை எதற்கும் தி.மு.க தலைமை காது கொடுக்கவில்லை. மீண்டும் செந்தில் பாலாஜியை அமைச்சராக்கியதோடு அவர் முன்னர் கவனித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளுக்கு மீண்டும் அமைச்சராக்கியிருக்கிறது. இதன் பின்னணி என்னவென்று விசாரித்தோம்…