சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு; சாலை ஈடுபட்ட கவுன்சிலர்கள் கைது – திருப்பூரில் நடந்தது என்ன?

Share

திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ந.தினேஷ்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய 2 நிமிடங்களில், அதிமுக மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை மற்றும் கருப்பு சேலை அணிந்து வந்து சொத்து வரி உயர்வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி, கையில் பதாகையுடன் தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதற்கிடையே மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் கூட்டத்தில் வைக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக தெரிவித்தார்.

சொத்து வரி தொடர்பாக விவாதிக்காததால், ஆத்திரம் அடைந்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக கவுன்சிலர்களும் அதிமுகவினருக்கு ஆதரவாக குரல் எழுப்பவே 15 நிமிடங்களில் மாமன்றக் கூட்டம் நிறைவடைந்தது. தொடர்ந்து, அதிமுக கவுன்சிலர்கள் அவையில் அமர்ந்து முக்காடு போட்டபடி சொத்து வரி உயர்வுக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

அதிமுகவினர்

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி செய்தியாளர்களிடம் கூறும்போது, “திராவிட மாடலில் ஜனநாயகத்துக்கு இடமுண்டு என்று சொல்கிறார்கள். ஆனால் மக்கள் கருத்தை மாமன்றத்தில் பிரதிபலிக்க இடம் தரமறுக்கிறார்கள். மக்கள் மற்றும் தொழிலை வஞ்சிக்கும் சொத்து வரியை திரும்ப பெற வேண்டும்.” என்றார். தொடர்ந்து, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர்களும் சொத்து வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பவே, 25 கவுன்சிலர்கள் உள்பட 50 பேரை போலீஸார் கைது செய்தனர். தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அனைவரும் சிறிது நேரத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

மறியல்

இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அரசியலில் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மத்திய அரசின் கொள்கையால் வரி உயர்வு அமல்படுத்தப்படுகிறது. கூட்டணிக் கட்சியினர் உள்ளிட்டோரின் கோரிக்கை தொடர்பாக அரசுக்கு தெரியப்படுத்தப்படும். வரி உயர்வு தொடர்பாக விளக்கம் தர தயாராக இருந்த நிலையில், அவர்கள் அதனை கேட்க முன்வராமல் குந்தகம் ஏற்படுத்தி உள்ளனர்” என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com