சேவாக் சதத்தை தடுத்ததற்காக ஷனகாவை மன்கட் முறையில் அவுட் செய்து பழிதீர்த்தாரா ஷமி? | shami take revenge for blocking sehwag s century by mankading shanka sri lanka

Share

இலங்கை அணிக்கு எதிராக நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி கேப்டன் ஷனகா 98 ரன்களில் இருந்தபோது கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி அவர் கிரீசை விட்டுத் தாண்டி சென்றதற்காக மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். இது பெரிய சர்ச்சையாவதை ரோகித் சர்மா அபாரமாகத் தடுத்தார், அந்த அவுட்டிற்கான அப்பீலை விலக்கிக் கொண்டார். இதனால் ஷனகா மீண்டும் ஆடி சதம் எடுத்தார்.

அப்போது கடைசி 3 பந்துகளில் இலங்கை அணி வெற்றி பெற 83 ரன்கள் தேவை இருந்தது. வெற்றி பெறவே முடியாது எனும்போது ஷனகாவின் அருமையான இன்னிங்சை இவ்விதமாக அசிங்கமாக முடிக்கக் கூடாது என்று ரோகித் சர்மா முடிவெடுத்து தன் அவுட் கோரலை விலக்கிக் கொள்ள ஷனகா சதம் எடுத்தார்.

இது தொடர்பாக ரோகித் சர்மா கூறிய போது, “ஷமி இப்படிச் செய்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஷனகா அருமையாக ஆடினார். அவர் ஆடிய விதத்திற்காகவே அவர் சதமெடுக்க உரியவர். அவரை இந்த முறையில் அவுட் செய்யக்கூடாது. அவர் 98 ரன்களில் இருந்தார். அவரை எப்படி வீழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோமோ அப்படித்தான் அவுட் செய்ய முடியுமே தவிர, மன்கடிங் செய்து அவுட் ஆக்குவது கூடாது. இப்படி அவுட் ஆக்குவது பற்றி நாங்கள் சிந்திக்கவும் இல்லை. மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், ஷனகாவுக்கு ‘ஹாட்ஸ் ஆஃப்’, அவர் உண்மையிலேயே சிறப்பாக ஆடினார்” என்று கூறி நிலைமையை கூல் ஆக்கினார்.

இது உண்மையில் தோனி ஒருமுறை இங்கிலாந்து வீரர் இயன் பெல்லை ரீ கால் செய்ததற்குச் சமமான ஒரு பெருந்தன்மையான ஸ்போர்ட்டிங் ஸ்பிரிட் ஆகும். சரி ரோகித் சர்மா இத்தகைய பெருந்தன்மையை நாம் விதந்தோதும் அதே வேளையில் 2010-ம் ஆண்டு இந்திய அணி இலங்கை சென்றிருந்த போது ஒருநாள் போட்டி ஒன்றில் சேவாக் 99 ரன்களில் இருந்த போது இலங்கை அணியின் ஆஃப் ஸ்பின்னர் சூரஜ் ரந்திவ், இந்தியா வெற்றி பெற ஒரு ரன் தேவை என்ற நிலையில் வேண்டுமென்றே அசிங்கமாக நோ-பால் வீசி சேவாக் சதமெடுப்பதைத் தடுத்தார். வீசப்பட்ட பந்து சிக்சருக்குச் சென்றது. எனவே தார்மீக ரீதியாக சேவாக் சதம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், கிரிக்கெட் விதிகளின் படி நோ-பால் வீசி விட்டதால் அப்போதே ஆட்டம் முடிந்து விட்டது. இந்தியா வென்று விட்டது, சேவாக் 99 ரன்களில் தேங்கினார்.

அப்போது சூரஜ் ரந்திவை அப்படிச் செய்யச் சொல்லி அறிவுறுத்தியது இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷான். சேவாக் சதம் பற்றியெல்லாம் கவலைப்படுபவர் அல்ல என்பது வேறு விஷயம். ஆனால் அன்றைய தினம் அவருக்கு தகுதியான அந்தச் சதத்தை அசிங்கமாக நோ-பால் வீசி தடுத்த போது அப்போது இலங்கை அணியின் ஆகச்சிறந்த மனிதர், கேப்டன் சங்கக்காரா, நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளித்தார். அதன்படி சூரஜ் ரந்திவ் ஒரு போட்டியில் தடை செய்யப்பட்டார், ரந்தீவை நோ-பால் வீசச் சொன்ன தில்ஷனுக்கு அந்த ஆட்டத்திற்கான சம்பளம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டது.

பொதுவாக கீழ்மட்டக் கிரிக்கெட்டில்தான் இத்தகைய மலினமான செயல்கள் இருக்கும். டெஸ்ட் போட்டிகளில் பேட்டர் சதமெடுக்கும் போது பதற்றத்தில் இருப்பதைப் பயன்படுத்தி களவியூகத்தை நெருக்கமாக அமைத்து பிரஷர் கொடுப்பது வேறு. பேட்ஸ்மேன் சதத்தை நெருங்கும் போது தேவையில்லாமல், அதுவும் வெற்றி பெறவே முடியாது என்ற நிலையில் மன்கட் முறையில் அவுட் செய்வதோ அல்லது மோசடி செய்து வீழ்த்துவதோ கிரிக்கெட் ஆட்டத்தின் மதிப்பீடுகளுக்கு எதிரானது. ஆனால், சேவாக்குக்கு அன்று சூரஜ் ரந்திவ் செய்தது, இதை விடவும் மலிவான ஒரு செயல், ஒரு வீரர் சதமெடுத்தால் என்ன ஆகிவிடப்போகிறது? அதைப் போய் நோ-பால் வீசி தடுப்பதென்றால் இதை விட மலினமான செயல் வேறு என்ன இருக்க முடியும்? நேற்று ஷமி செய்ததும் அதற்குச் சமமான ஒரு செயலே! ஷனகா சதமெடுத்தால் என்ன குடிமுழுகி விடப்போகிறது?

ஆனால் சில வீரர்கள் இப்படிச் செயல்படும்போது கிரிக்கெட் விளையாட்டின் மாண்புகளைக் குலைக்கும் போது கேப்டன்கள் எழுந்து நின்று கிரிக்கெட் மாண்பை காப்பாற்ற வேண்டும். அப்போது சங்கக்காராவும், நேற்று ரோகித் சர்மாவும் செய்தது இதைத்தான்.

இந்தியாவின் முகமது ஷமியைப் பொறுத்தவரை ஏகப்பட்ட நெருக்கடியில் அவர் இருக்கின்றார். யுஏஇயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே ஓவரில் 20 ரன்களை ஷமி விட்டுக் கொடுத்ததை அடுத்து அவரை சரமாரியாக நெட்டிசன்கள் வசைபாடினர். அவர் வேண்டுமென்றே பாகிஸ்தானுக்கு சாதகமாகச் செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. விராட் கோலி அதற்குத்தான் கடுமையாக ரியாக்ட் செய்து நெட்டிசன்களை கடுமையாக விமர்சித்தார். இதனால்தான் அவர் கேப்டன்சி பறிபோனதும் கூட என்று சொல்பவர்களும் உள்ளனர். ஷமி இப்போது இம்மாதிரியான மன்கட் முறை அவுட் செய்வதன் மூலம் இழந்த ரசிகர்களை மீட்டெடுக்க முயற்சி செய்தாரா என்பதும் தெரியவில்லை. அல்லது சேவாகிற்கு சூரஜ் ரந்திவ் செய்ததை நினைவில் கொண்டு செய்தாரா என்பதும் தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் ரோகித் சர்மாவின் செயல் மிகச்சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் ஸ்பிரிட் என்பதில் சந்தேகமே இல்லை.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com