இதற்கிடையில், அ.தி.மு.க., தி.மு.க என இரு கட்சிகளும் சமமாக இருந்ததால், பிரச்னை வெடிக்கலாம் எனத் தேர்தல் நடைபெற்ற கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர். வேடசந்தூர் அருகேயுள்ள தாடிக்கொம்பு பகுதியில், அ.தி.மு.க மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருவிக என்பவர், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வாகனத்தில் தேர்தலில் வாக்களிக்க வந்துகொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது அவர்களை வழிமறித்த மர்மநபர்கள், கார் கண்ணாடியை உடைத்து, திருவிக-வைக் கடத்தியதாக, எம்.விஜயபாஸ்கர் தரப்பு குற்றம்சாட்டியது. இது சம்பந்தமாக, வேடச்சந்தூர் டி.எஸ்.பி சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். திருவிக-வின் மகனும், ஒன்றிய கவுன்சிலருமான தமிழ்செல்வன், தன்னுடைய தந்தை கடத்தப்பட்டதாகவும், அதனால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் தேர்தல் மாவட்ட ஆட்சியர், காவல்துறை, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எனப் பலதரப்பிடம் மனு கொடுத்தார். இதையறிந்த அ.தி.மு.க-வினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிக அளவில் திரண்டனர்.
திருவிக கடத்தப்பட்டதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அதேபோல், தி.மு.க-வைச் சேர்ந்த கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், தேர்தல் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள் சென்றபோது, அங்கு கூடியிருந்த அ.தி.மு.க-வினர் கோஷங்கள் எழுப்பினர். பதிலுக்கு தி.மு.க-வினரும் கோஷங்கள் எழுப்ப, இருதரப்பும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர்.