சுண்டைக்காய் வற்றல்:
வற்றல் ரகங்களிலேயே மிகவும் ஃபேமஸ் என்றால் அது நம்ம சுண்டைக்காய் வற்றல்தான்! நோய் நீக்கும் வற்றல் வகையறாவில் எப்போதுமே முதல் பரிசு சுண்டை வற்றலுக்குத் தான். உலர்ந்த சுண்டைக்காய்களை அப்படியே பிளந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து தயிரில் கலந்து வெயிலில் காய வைத்து, நன்கு உலர்த்தி வற்றலாகச் செய்துகொள்ளலாம்.
வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம், சுவையின்மை போன்ற செரிமானம் சார்ந்த அறிகுறிகளைக் குணமாக்க, சுண்டை வற்றல் இருந்தால் போதும்.
சுண்டைக்காய் வற்றல், வயிற்றில் தங்கிய புழுக்களை உடனடியாக வெளித்தள்ளும். கழிச்சல் நோயைக் கட்டுக்குள் வைக்க சுண்டை வற்றலை நன்றாகப் பொடி செய்து, தயிரில் கலந்து சாப்பிடலாம். சில நேரங்களில் சோர்வாக இருக்கும் மந்தமான வயிற்றின் செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் சுண்டை வற்றல் உதவுகிறது.
புளிக்குழம்பு:
`சுண்டைக்காய் புளிக் குழம்பு’ பலரின் விருப்பமான உணவு. கசப்புச்சுவை இருப்பதாகக் கருதினால், பனைவெல்லம் சேர்த்து சமைத்து சாப்பிட்டலாம். இதனால் கசுப்புச்சுவை அவ்வளவாகத் தெரியாமல் சுண்டையின் முழு பயன்களையும் அடைய முடியும். முதிர்ந்த சுண்டையின் பழங்களை அரைத்து, நெற்றியில் பற்று போட்டால், தலைவலி குறையும்!
சுண்டை வற்றல் சூரணம்:
`சுண்டை வற்றல் சூரணம்’ எனும் சித்த மருந்தைப் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம். குடல் சார்ந்த பெரும்பாலான பிரச்னைக்கு இந்த சுண்டை வற்றல் சூரணம் சிறந்த மருந்தாகப் பயன்படும். சுண்டை வற்றல் சூரணத்தை சிறிதளவு மோரில் கலந்து பருக, குடலில் உள்ள நல்ல நுண்கிருமிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.
உங்கள் செரிமானம் முழுமையாக நடைபெற நலம் பயக்கும் நுண்கிருமிகள் மிக அவசியம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம் போன்ற பிரச்னைகளுக்கு சுண்டைவற்றல் சூரணம் நம்மிடம் இருந்தால் போதும்.