சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா,எஸ்.சௌந்தர் பதவியேற்பு

Share

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக  என்.மாலா மற்றும் எஸ். சௌந்தர் ஆகியோர் பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலிபணியிடங்கள் எண்ணிக்கையை நிரப்பும் வகையில் ஆறு வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது. ஆறு பேரில் என்.மாலா மற்றும் எஸ். சௌந்தர் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி  இருவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்து, காலி பணியிடங்களின் எண்ணிக்கை 14 ஆக குறைந்துள்ளது.

மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், வழக்கறிஞர் சங்கங்களின் தலைவர்கள் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். அவற்றிற்கு நீதிபதிகள் மாலா மற்றும் சௌந்தர் ஆகியோர் ஏற்புரை ஆற்றினர்.

இதையும் படிங்க: கவுன்சிலர் பதவிக்கான தகுதியை இழந்ததாக அறிவித்த மாநகராட்சி ஆணையர்… அதிர்ச்சியில் திமுக

நீதிபதி என். மாலா பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மற்றும் கேசரி பள்ளிகளில் படித்தவர். சட்டப்படிப்பை சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் படித்து, 1989-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞராக பதவி செய்து, 32 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவத்தை உடையவர்.  ஆங்கிலோ பிரெஞ்ச் டெக்ஸ்டைல்ஸ் புதுச்சேரி பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி  கழகம் (ஐ.சி.எம்.ஆர்.), காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்கு வழக்கறிஞராக ஆஜராகியுள்ளார். 2020-ம் ஆண்டு புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு பிளீடராக நியமிக்கப்பட்டார். அந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமை பெற்றவர்.

மேலும் படிங்க: செலவுக்கு பணம் தராத தாயை எரித்துகொன்ற மகன்: 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிப்பு

நீதிபதி எஸ். சௌந்தர் தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறையில் 1971ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி பிறந்தவர்.
இவரது தந்தை ஆர். சிவபுண்ணியம் மயிலாடுதுறையில் உள்ள மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில்புரிந்தவர். தனது மகன் சவுந்தர் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து வழக்கறிஞர் தொழிலை கைவிட்டுள்ளார்.
பத்தாம் வகுப்பில் கணித படத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்து, பள்ளி கல்வியை மயிலாடுதுறையில் முடித்தவர்.

சென்னையில் உள்ள டாக்டர் அம்பேதர் சட்டக் கல்லுரியில் முதுகலை சட்டப்படிப்பை முடித்து, 1993ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்தார்.

சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற ஏ.எஸ். வெங்கடாசலமூர்த்தி, தமிழகத்தில் வழக்கறிஞராக இருந்தபோது ஜூனியராக பணியாற்றியுள்ளார்

இவர் தனியாக தொழில்புரிந்த போது நடத்திய 670 வழக்குகள் பல்வேறு சட்ட புத்தகம் மற்றும் இதழ்களில் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க: அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சென்னை மேயர் பிரியா.. நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராக இருந்தவர், சென்னை உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையத்திலும், சில வழக்குகளில் நீதிமன்றத்திற்கு உதவும் நபராகவும் இருந்துள்ளார். இளநிலை சிவில் நீதிபதிகளாக தேர்வானவர்களுக்கு நீதித்துறை பயிற்சி மையத்தில் வகுப்புகளை எடுத்த அனுபவமும் நீதிபதி சௌந்தருக்கு உள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com