கோடைக்காலத்தில் சூரியன் நம் சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருந்தாலும், சூரிய ஒளிக்கதிர்கள் நம் கண்களை எப்படியெல்லாம் பாதிக்கக்கூடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
சூரிய ஒளியானது கண்களை பாதிக்குமா… என்னென்ன பிரச்னைகளை உண்டாக்கும்; தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? இது குறித்து விளக்கம் தருகிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் ஸ்ரீனிவாச ராவ்.
சூரியனில் இருந்து வெளியேறும் புற ஊதாக்கதிர்களான UV-A மற்றும் UV-B இரண்டும், சருமத்தில் ஊடுருவி புற்றுநோயை ஏற்படுத்துவது போல, கண்களில் விழித்திரையை (retina) பாதித்து (Macula degeneration) மாகுலர் டீஜெனெரேஷன் எனப்படும் பார்வை இழப்பு மற்றும் கண் இமைகளில் புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.
வெயில் நேரத்தில் அதிகமாக சூரிய ஒளியில் நின்று வேலை செய்பவர்களுக்கு, கண் கருவிழியை புற ஊதா கதிர்களிடம் இருந்து பாதுகாக்கும் கார்னியல் பகுதி சேதமாகி, கண்ணில் உள்ள வெள்ளைப் பகுதியில் கடுமையான வீக்கத்தை ஏற்படுத்தும். இப்பிரச்னைக்கு நீண்ட நாள்கள் சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், கண்களில் சதை வளர்ந்து, அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.