
தினமும் நாம் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவை உண்பது முக்கியம். ஆனால் நம்முடைய சூழலுக்கு ஏற்ப ஏதோ ஒன்றை வாயில் திணித்துக் கொண்டு, அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவோம்.

அந்த வகையில் பாதுகாப்பான உணவின் முக்கியத்துவத்தை உணர்த்த `உலக உணவு பாதுகாப்பு தினம்’ ஆண்டுதோறும் ஜூன் 7 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

உணவை உற்பத்தி செய்தல், தயாரித்தல், பரிமாறுதல், சேமித்து வைத்தல் என எந்த படிநிலையிலும் உணவு மாசடைவதற்கான பல சாத்தியக்கூறுகள் உண்டு.

இதனால், உணவுப் பாதுகாப்புக்குப் பின்பற்ற வேண்டியவை பற்றி உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

சமையலறைக்குள் நுழைவதற்கு முன்பு கைகளைக் கழுவுவதை உறுதி செய்யவேண்டும். சமைக்கும் போது எப்போதும் தூய்மை மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.

சமைத்த மற்றும் சமைக்காத உணவை தனித்தனியான கன்டெய்னரில் வைக்க வேண்டும். இப்படி வைக்கையில் உணவு அசுத்தமாவது தடுக்கப்படும்.

கிருமிகள் அல்லாத முழு ஊட்டச்சத்து உணவுக்கு, முழுமையாகச் சமைக்க வேண்டும்.

இடம், வெப்பநிலைக்கு ஏற்றார்போல அந்தந்த உணவுகள் சேமிக்கப்பட வேண்டும்.

சமையலுக்கு எப்போதும் சுத்தமான தண்ணீர் மற்றும் மசாலா பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் அசுத்தமான உணவால் 10-ல் ஒருவர் நோய்வாய்ப்படுகிறார். 4,20,000 பேர் இறக்கின்றனர். இதனால் 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆண்டுதோறும் 1,25,000 இளம் குழந்தைகள் உணவு மூலம் பரவும் நோய்களால் (foodborne diseases) இறக்கின்றனர்.

உணவு மூலம் பரவும் நோய்களால் ஒருவர் பாதிக்கப்படுகையில், வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பொதுவான அறிகுறிகள் தோன்றும்.

ரசாயனங்கள், நச்சுகள் கொண்ட அசுத்தமான உணவை உட்கொள்கையில், புற்றுநோய் மற்றும் நரம்பியல் கோளாறுகள் உள்ளிட்ட நீண்டகால உடல்நலப் பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.