“கண்டதேவி தேர்’
அதைத்தொடர்ந்து மதியம் காரைக்குடியில் ஓய்வெடுத்துவிட்டு கண்டதேவியிலுள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். இப்பகுதியிலுள்ள சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் கலந்துகொண்டவர், ராம் நகரிலுள்ள தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செயப்பட்ட ‘கண்டதேவி தேர்’ குறித்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு கிளம்பினார்.

அரசியல்வாதிபோல் தமிழக அரசுக்கு எதிராக பேசியும், பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வரும் ஆளுநர் ஆர்.என் ரவி, அவர் சென்ற இடங்களில் அரசியல் கட்சிகள், அமைப்புகளின் ஆர்பாட்டம், கருப்புக்கொடி எதிர்ப்பையெல்லாம் கண்டுகொண்டதில்லை. ஆனால், முதல் முறையாக மக்களின் எதிர்ப்பு காரணமாக ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் திரும்பிச் சென்றுள்ளார் என்கிறார்கள்.
இதுகுறித்து தேவகோட்டை வட்டாரத்தில் உள்ள அரசுத்துறையினர், சமூக ஆர்வலர்களிடம் விசாரித்தபோது, “கண்டதேவி தேரோட்டத்தில் வடம் பிடிக்க தங்களுக்கும் உரிமை கேட்டு அப்பகுதியிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் பல ஆண்டுகளுக்கு முன் போராட்டம் நடத்தினார்கள். புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செயத பிறகு அனைத்து சாதியினரும் வடம் பிடித்து தேரை இழுக்க வேண்டும் என்றும், இதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்குப் பின்பு, கண்டதேவி கோயில் பாலாலயம் செய்யப்பட்டதாலும், புதிய தேர் செய்யும் பணி நடைபெற்றதாலும் பல ஆண்டுகள் தேரோட்டம் நடைபெறவில்லை. அதற்கு பின்பும் உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த ஆண்டு அனைத்து சாதியினரும் இணைந்து தேரோட்டம் நடத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால், அதில் தேவேந்திர குல மக்கள் அதிகம் பங்குபெறவில்லை, உயர் நீதிமன்ற உத்தரவு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் புகார் எழுந்தது.