தான் பெற்ற மகள் ஆடிப்பாடி மகிழ்ந்தவள், தற்போது கை,கால் செயலிழந்ததைக் கண்டு மனமுடைந்த தந்தை, சென்னை தலைமைச்செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். மருத்துவ சிகிச்சையில் நடந்த தவறு என்ன என்று குழம்பிய நிலையில் பொது சமூகம் தன் கோபத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியது.
மருத்துவத்தில் நடந்த தவறு என்ன?
செங்கல்பட்டில் பணிபுரியும் அரசு பொது மருத்துவர் கார்த்திகேயனிடம் பேசினோம்… “சில நேரங்களில் குழந்தை சிறுநீரக பிரச்னையுடனே பிறக்கும். புற்றுநோயைப் போல் Nephrotic syndrome எனப்படும் இந்த பாதிப்பை சரிசெய்வதும் கடினம். சிறுநீரகத்தின் வேலை, உடலில் உள்ள கழிவுகளை அக்ற்றுவது. இந்தப்பணியை சிறுநீரகம் சரியாகச் செய்யவில்லை என்றால் உடலில் கழிவுகள் தேங்கிவிடும்.
இப்பிரச்னையின் காரணமாக சிறுநீரகம் பத்து சதவிகிதம் மட்டுமே தன் வேலையைச் செய்திருக்கும் . சிறுநீரகம் செயல்படுவதற்கு ஸ்டீராய்டு மருந்துகள் கொடுத்திருப்பார்கள். அந்த மருந்து பலனளிக்காததால் வேறொரு மருந்து கொடுக்கப்பட்டிருக்கும். இந்த மருந்தும் பலனளிக்கவில்லை என்றபோது டயாலிசிஸ் செய்திருப்பர்.
இந்நிலையில் குழந்தையின் உடலில் பின்விளைவுகள் காட்டத் தொடங்கியுள்ளது. சில நோய்களை குணப்படுத்துவது மருத்துவர்களாலேயே முடியாது. உதாரணத்துக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு இளம் வயதில் நோயால் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் 15 வருடங்களுக்கு கழித்து கண்பார்வை மங்கலாகத் தெரியலாம்.
இப்பிரச்னை வராமல் இருக்க, இளம்வயதில் சிகிச்சை அளிக்கப்படும். எந்தவித சிகிச்சையும் அளிக்கவில்லை என்றாலும், சிகிச்சை பலனளிக்கவில்லை என்றாலும், எதிர்காலத்தில் பார்வை மங்கலாகவே தெரியும். அதுபோல் தான் குழந்தைக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் பலனளிக்காமல் போயிருக்கும். இப்போது எந்தப் பிரச்னையும் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் வேறொரு விளைவு குழந்தைக்கு ஏற்படும். மருந்துகள் எடுக்காமல் இருந்தால் குழந்தை ஆரோக்கியமாக இருந்திருக்கும் என்று தீர்மானிக்க முடியாது” என்றார்.