கொரோனாவுக்குப் பின்னர், புதுப்புது வைரஸ் தொற்றுகள் மற்றும் நோய்க்கிருமிகள் குறித்த எச்சரிக்கை அவ்வப்போது வெளியாகி, மக்களிடம் பீதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், உலக சுகாதார நிறுவனத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய எச்சரிக்கை அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அது, இதுவரை நாம் கேட்டிராத வகையில் திகைப்பையும் பயத்தையும் ஒருசேர உண்டாக்குவதாக இருக்கிறது.
`பெல்ஜிய நாட்டில் தயாராகும் சாக்லேட்டுகளிலிருந்து ‘சால்மோனெல்லா டைபிமுரியம்’ (Salmonella typhimurium) எனும் புதுவிதமான நோய்த்தொற்று பரவுகிறது!’ – உலக சுகாதார நிறுவனத்தால் உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கைதான், அந்தச் செய்தி. இது, இரைப்பை குடல் அழற்சியை உண்டாக்கும் நோய்க்கிருமியாகக் கூறப்படுகிறது.
இந்தப் புதிய வகை நோய்க்கிருமியானது, மல்டிடிரக் – ரெசிஸ்டென்ட் சால்மோனெல்லா டைபிமுரியம் எனப்படுகிற நோய்த்தொற்று குழுவைச் சேர்ந்தாகச் சொல்லப்படுகிறது. “பெல்ஜியத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சாக்லேட்டுகள் மட்டுமன்றி, 113 நாடுகளில் விநியோகிக்கப்பட்டுள்ள சாக்லேட்டுகளிலும் இந்த நோய்த்தொற்றுக்கான மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளன” என்று முதல்கட்ட தகவலைக் கூறியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.