சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி, ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக நேரம் கேட்டுள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் அவ்வப்போது எழும் பிரச்னைகளை டெல்லி பாஜ மேலிட தலைவர்கள் தலையிட்டு தீர்த்து வைத்து வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றுத்தான் போராட்டத்தை கைவிட்டதாக அவரே அறிவித்தார்.
இப்போதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டுள்ள அதிகார யுத்தத்தில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கினாலும் சட்ட ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் ஓ.பன்னீர்செல்வமும் கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறார். இதனால் அதிமுக. அரசியலில் தீவிர கவனம் செலுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் வருகிற 27ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். அன்று புதுவை மாநிலத்தில் அரசு விழாவில் பங்கேற்கும் மோடி 28ம் தேதி மாலை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கிறார்.
சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியாக நேரம் கேட்டு இருக்கிறார்கள். இருவரிடமும் மோடி நல்ல நட்புடன் இருக்கிறார். ஏற்கனவே சென்னை வந்தபோது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் விமான நிலையத்தில் சந்தித்து கட்சி பிரச்னைகள் பற்றி விவாதித்து சில ஆலோசனைகள் கூறியிருந்தார்.
தற்போதும், சென்னை வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து, தனக்கு இருக்கும் ஆதரவை சுட்டிக்காட்டி பாஜ ஆதரவை தன் பக்கம் இழுக்க திட்டமிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதால் அதிமுக சார்பில் அவரை சந்திப்பதை மோடி தவிர்க்க வேண்டும் என்பதையும் எடப்பாடி கூற திட்டமிட்டுள்ளார். ஓபிஎஸ்சும் பிரதமர் மோடியை சந்தித்து, தற்போது அதிமுகவில் தனக்கு ஏற்பட்டுள்ள நிலைமை எடுத்துக்கூறி உதவும்படி கோரிக்கை வைப்பார் என்று கூறப்படுகிறது.