ஆணுக்கு வலது கையிலும் பெண்ணுக்கு இடது கையிலும் நாடி பார்க்க வேண்டும். உடலில் நோய் ஏதும் இல்லாமல் சம நிலையில் இருக்கிறது என்றால் வாத ஒட்டம் ஒரு அலகு ஆகவும், பித்த ஓட்டம் அந்த அலகில் பாதியாகவும், கப ஓட்டம் அதனினும் பாதியாகவும் இருக்கும். அதாவது வாத, பித்த, கபம் அளவு முறையே 1-1/2-1/4 என்று இருக்கும்.
இதுவே ஆரோக்கியமான உடலுக்கான இயல்பு நிலையாகும். நாடி பார்ப்பதன் மூலம் வாத, பித்த, கப அளவுகளைக் கணக்கிடும் சித்த மருத்துவர் இதில் எது மிகுந்துள்ளது, எது குறைந்துள்ளது என்று கணக்கிட்டு எதற்குள் எது விரிந்துள்ளது என்றும் கண்டறிகின்றார். அதன்பின்னர் வயது, கிழமை, நாள், நேரம், மாதம், ஆண்டு ஆகியவற்றுக்கு ஏற்ப வாத, பித்த, நாடிகள் மீண்டும் கணக்கிடப்படும். நோய்கள், நோய்க்கான மூலகாரணம், அறிகுறிகள் எனச் சகலமும் நாடி பார்த்தலில் தெரிந்துவிடும். பல ஆயிரம் ரூபாய்கள் செலவழித்து முழு உடல் பரிசோதனை செய்துகொள்வதற்குச் சமம் நாடி மூலம் அனைத்தையும் சட்டென அறிந்துகொள்வது’’ என்று சொல்லும் பாஸ்கரன், தான் நாடி பார்த்துச் சொல்லியவற்றை, ஒப்பீட்டு பார்க்கப் பரிசோதனைக் கூடங்களுக்குச் சென்று பரிசோதனை பார்த்து வரவும் பரிந்துரை செய்கிறார். நாடிப்பார்த்துச் சொல்லியவையும் பரிசோதனை அறிக்கையும் துல்லியமாக உள்ளதைக் கண்டு, மருத்துவம் பார்க்க வந்தவர்கள் வியந்து போகிறார்கள்.
சரி, ஒரு மனிதன் நோயில்லாமல் நலமாக வாழ நீங்கள் கூறும் வழிமுறைகள் என்ன? என்று கேட்டோம், சித்த மருத்துவர் பாஸ்கரனிடம் கேட்டோம். அவர் சொல்லிய அற்புதமான பதிலை அடுத்தப் பகுதியில் பார்ப்போம். சித்த மருத்துவர் பாஸ்கரனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளையும் இங்கே, குறிப்பிடுங்கள். அவரிடம் பதில் பெற்று வெளியிடுகிறோம்.