ஒரு டீஸ்பூன் கடுகுப் பொடியுடன், ஒரு டீஸ்பூன் தர்பூசணி ஜூஸைக் கலந்து பூசினால், மங்குகள் உள்ள பகுதியில் தர்பூசணியின் சாறு ஊடுருவிச் சென்று மங்குகளை மறையச் செய்யும். தர்பூசணி விதை எண்ணெயை (இது கடைகளில் கிடைக்கிறது) பிறந்த குழந்தைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டி வர, சருமம் மெருகேறி ஜொலிக்கத் தொடங்கும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமானலும் ஆபத்து என்பார்கள். தர்பூசணி கோடைக்கு ஒரு வரப்பிரசாதம் என்றாலும், 92 சதவிகிதம் நீரின் பங்கு இருப்பதால் அசீரணக்கோளாறு, வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு உப்புசம் அடைதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
மேலும், தர்பூசணியில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், மிக எளிதாகக் கொழுப்பாக மாறும் தன்மை உடையது. சளிப்பிரச்னை உள்ளவர்கள், தர்பூசணியை சாப்பிட்டால் அதிகப்படியான காய்ச்சல், தொண்டை கரகரப்பு மற்றும் சிறுநீரின் நிறம் மாறுதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், அளவுக்கு அதிகமாகத் தர்பூசணி சாப்பிட வேண்டாம். காரணம் இதில் உள்ள அதிகப்படியான நீரின் அளவு சிறுநீரகப் பிரச்னையை அதிகப்படுத்த வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என்றாலும் அதிகமாகச் சாப்பிட்டால் உயர் சர்க்கரை அளவு ஏற்பட்டுப் பாதிப்பு உண்டாகலாம். அதிகப்படியாகத் தர்பூசணி சாப்பிடுவதால் கர்ப்பிணிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது என்பதால், அவரவர் உடல் தன்மைக்கேற்ப அளவாக தர்பூசணி உட்கொண்டு பயனடையலாம்.
– எம்.மரிய பெல்சின்