நமது உடலில் உள்ள மிகச்சிறிய ரத்த நாளங்களின் (Capillaries) கசிவு அல்லது ரத்த நாளங்கள் ஒன்றோடொன்று இணையும்போது ஏற்படும் சிறிய மாற்றத்தினால்தான் (Anastomosis formation) இப்படி சிவப்பு நிறப் புள்ளிகள் உருவாகின்றன. இவை பொதுவாக உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை என்பதால், இவற்றை அகற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.
ஆனாலும் சிலருக்கு இவை தோற்றத்தில் ஒருவித தொந்தரவை ஏற்படுத்தலாம். அதாவது மச்சத்தின் அளவு பெரிதாக இருந்தாலோ அல்லது பார்ப்பதற்கு உங்களுக்கு அசௌகர்யமாக இருந்தாலோ (Disturbing), விருப்பப்பட்டால் மட்டும் அவற்றை நீக்கிக் கொள்ளலாம்.

நிறத்தைப் பார்த்தும், திடீரென வருவதைப் பார்த்தும் பலரும் சிவப்பு நிற மச்சங்களைக் கண்டு பயப்படுகிறார்கள். இன்னும் சிலருக்கு இத்தகைய மச்சங்கள் நிறைய வருவதும் உண்டு. இவை உடலில் தோன்றும் சாதாரணமான தழும்பு அல்லது புள்ளி போன்றவைதான் என்பதால் பயப்படாதீர்கள்.
தோற்றத்துக்காக அகற்ற நினைத்தால் சரும மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். மற்றபடி அவற்றை நீங்களாகக் கிள்ளுவது, அகற்ற முயற்சி செய்வது போன்றவற்றை எல்லாம் செய்ய வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.