நடிகர் அஜய் தேவ்கன் இந்தி நம் நாட்டின் தேசிய மொழி என்று தெரிவித்திருப்பதற்கு கர்நாடகா அரசியல் தலைவர்கள் தொடங்கி பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு இந்தி தேசிய மொழியா என்ற விவாதமும் எழுந்துள்ளது. தற்போது உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத் இந்தி பேசாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்று சர்ச்சைக்குறிய வகையில் பேசியிருக்கிறார். அஜய்தேவ்கன் இந்தியைத் தேசிய மொழி என்று தெரிவித்திருப்பதை நடிகை கங்கனா ரணாவத் நியாயப்படுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்தி தேசிய மொழி என்பதை இந்திய அரசியல் சட்டம் உறுதிபடுத்தி இருக்கிறது. எனவே அஜய் தேவ்கன் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. இந்தியை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையெனில் மத்திய அரசை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம். ஜெர்மன், பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு செல்லும் போது அங்கு அவர்கள் தாய்மொழியில்தான் பேசுகின்றனர். காலனி ஆதிக்க வரலாறு எவ்வளவு இருண்டகாலமாக இருந்தபோதிலும் துரதிர்ஷ்டவசமாக இப்போது ஆங்கிலம் நமது இணைப்பு மொழியாக மாறிவிட்டது. உள்நாட்டில் கூட ஆங்கிலத்தைத்தான் இணைப்பு மொழியாக பயன்படுத்துகிறோம். ஆங்கிலம்தான் இணைப்பு மொழியாக இருக்கவேண்டுமா அல்லது இந்தியோ, சமஸ்கிருதமோ அல்லது தமிழோ இணைப்பு மொழியாக இருக்கவேண்டுமா என்பதை நாம்தான் முடிவு செய்யவேண்டும்.

இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு மொழி விவகாரத்தில் முடிவு எடுக்கப்படவேண்டும். என்னை பொறுத்தவரையில் எந்த மொழி தேசிய மொழியாக இருக்கவேண்டும் என்று கேட்டால் சமஸ்கிருதம் தேசிய மொழியாக இருக்கவேண்டும் என்று சொல்வேன். இந்தி, ஜெர்மனி, ஆங்கிலம், பிரஞ்ச் மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்தே வந்துள்ளன. கன்னடம், குஜராத்தி, தமிழ் போன்ற மொழிகளை விட சமஸ்கிருதம் பழைமையானது. அப்படி இருக்கும் போது சமஸ்கிருதத்தை ஏன் தேசிய மொழியாக்கவில்லை. பள்ளியில் கூட கட்டாயமாக்கப்படவில்லை. ஏன் என்று தெரியவில்லை” என்று கங்கனா தெரிவித்தார்.
முன்னதாக மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் தனது புதிய படமான ‘தாகட்’டின் டிரெய்லரை வெளியிட்டார்.