08/05/2022 அன்று Delhi Capitals அணிக்கு எதிரான ஆட்டத்தின் வெற்றி ரசிகர்களின் முகங்களில் ஆயிரம்-வாட் சந்தோஷத்தை அப்பியிருக்கும். Net Run Rate-ஐ மைனஸிலிருந்து ப்ளஸிற்குத் தூக்கிய 91-ரன் பெரும் வெற்றி மட்டுமல்லாது, playoffக்குச் செல்ல CSKவிற்குக் கணிதக் கணக்குகளிலாவது இன்னும் வாய்ப்பிருப்பதும் இந்த சந்தோஷத்திற்குக் காரணங்கள்.
தோனியின், ப்ராவோவின் post-match பேச்சுக்கள் அடிக்கோடிட்ட ஒரு பொதுவான விஷயம் – புள்ளிகளின் மீதும், வாய்ப்புகளின் மீதும் அணியின் கவனம் இல்லை. அடுத்து வரும் போட்டிகளில் வெல்வதும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து, புதிய காம்பினேஷன்களை சோதித்துப் பார்த்து, அடுத்து வரும் சீசன்களுக்கு CSK-யின் புது வரவுகளைத் தயார் படுத்துவதும் தான் முக்கியம் என்ற எண்ண ஓட்டம்.

Tata IPL 2022-ன் தொடக்கத்தில் தோனி காப்டன் பதவியிலிருந்து விலக, அது ஜடேஜாவிடம் கொடுக்கப்பட்டது. இது நடக்கலாம் என்பதற்கான ஒரு சந்தேகத்தை தோனி போன வருடமேக் கொடுத்திருந்தார் – அடுத்த பத்தாண்டுகளைக் குறி வைத்து CSK அணியின் இயக்கம் இருக்கும் என்று கூறி. CSK-யின் வீரர்கள் தேர்வு ஏலத்தில் கூட இந்த எண்ணத்தின் பிரதிபலிப்பைப் பார்க்க முடிந்தது. நினைத்து வைத்திருந்த வீரர்கள் அநேகம் பேரை ஏலத்தில் எடுத்தத் திருப்தி தெரிந்தது CSK நிர்வாகக் குழுவின் முகங்களில். Faf du Plessis-யை விட்டுக் கொடுத்ததில் மட்டும் தவறு செய்துவிட்டார்களோ என்று நினைக்க வைத்தது CSK-யின் இறுதி லிஸ்ட்.
RCB-யில் Faf du Plessis-யின் காப்டன்சி செயல்பாடுகள், ‘அவரைத் தக்க வைத்து காப்டன்சியை அவரிடம் கொடுத்திருக்கலாமோ?’ என்று நினைக்க வைத்தன பல தருணங்களில். இந்த ஆண்டு RCB-யை அவர் புள்ளிப் பட்டியலில் கொண்டு சேர்த்திருக்கும் இடத்தைப் பார்க்கும் போது, CSK அணியும், தோனியின் கள அறிவும், CSK நிர்வாகமும் சேர்ந்திருந்தால், தோனிக்கு அடுத்த சரியான தலைமை CSK-விற்குக் கிடைத்திருக்குமோ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
SK-விற்குத் தலைமை ஏற்க ஜடேஜாவும் ஒன்றும் குறைந்தவரில்லை. ‘Sir Jaddu’ என்று தோனியால் முடிசூடப்பட்ட ஜடேஜாவிடம் தலைமைப் பொறுப்பு சென்றதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. இப்படி ஒரு சூழலை மனதில் வைத்தே கூட தோனியும் நிர்வாகமும் ஜடேஜாவை இத்தனை வருடங்களாகத் தயார் செய்து மெருகேற்றி வந்திருக்கலாம். கிரீடத்தின் கனம் தாங்காமல் ஜடேஜா திணற, அது அவருடைய ஆட்டத்தைப் பாதிக்க, நிலைமையை உணர்ந்த ஜடேஜா, தோனியிடமே மறுபடி பொறுப்பை ஒப்படைத்தார். எல்லோராலும் அவ்வளவு எளிதில் எடுக்க முடியாத முடிவு அது. முன்னாள் இங்கிலாந்து வீரர் Graeme Swann கூறியது போல், “ஆண்களின் ஈகோ இத்தகைய சொற்களை சொல்ல விடாது”.
முதிர்ந்த மனமும், தன் திறமைகளைப் பற்றியத் தெளிவான அளவீடுகளும் இருந்தாலொழிய இப்படிப்பட்ட முடிவை எடுப்பது கடினம். காப்டனாக ஜடேஜா பெற்ற முதல் வெற்றியைத் தன் மனைவிக்கு அர்ப்பணம் (dedicate) செய்தது, 1992-ல் பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்ற போது அந்த அணியின் காப்டனாக இருந்த இம்ரான் கான், ‘அந்த வெற்றி தான் கட்டிக்கொண்டிருக்கும் மருத்துவமனையின் நிர்மாணத்திற்குப் பெரிதும் உதவியாக இருக்கும்’ என்றுத் தன் அணியைப் பற்றியோ அணியின் உதவிக் குழு பற்றியோ ஒரு வார்த்தை கூட குறிப்பிடாமல் பேசியதை நினைவூட்டினாலும், முதல் வெற்றியின் adrenalin rush என்று புறந்தள்ளி ஒதுக்கி விடலாம் அந்தச் சறுக்கலை.

தலைமை பொறுப்பிலிருந்து விலகி ஒரு சாதாரண வீரராக அவர் அடுத்த மேட்ச்சில் ஆற்றிய பங்களிப்பு, playoff வாய்ப்பைத் தவறவிட்டதற்காக ரசிகர்கள் அவர் மீது கொண்டிருக்கும் கோபத்தைக் குறைக்க நிச்சயம் உதவியிருக்கும்.
ஒரு வீரராக உள்ளூர ஏற்பட்டிருக்கும் காயங்களை மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, CSK-யின் அங்கமாக ஜடேஜா வலம் வருவதென்பது அவருடைய முதிர்ச்சியை மட்டுமல்ல, நிர்வாகம் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் காட்டுகிறது. இவ்வருடம் ஏற்பட்ட குழப்பங்களால் அடுத்த வருட ஏலத்தில் அவரை விட்டுக்கொடுக்கும் எண்ணம் நிர்வாகத்திற்கு ஏற்படுமானால், அது அணிக்கு மிகப்பெரும் இழப்பாக அமைய வாய்ப்பிருக்கிறது. அடுத்த வருடம் தோனியும், கிட்டத்தட்ட நிச்சயமாக ப்ராவோவும் இல்லாத அணி தான் அமையும் என்பதால், ஜடேஜா போன்ற வீரரை இழப்பது (எப்பேர்ப்பட்ட அழுத்தங்கள் ஏற்பட்டாலும்) justifiable முடிவாகத் தோன்றவில்லை.
போன வருட மேட்ச் ஒன்றில் ப்ராவோவின் கடைசி ஓவர் பந்து வீச்சைப் பார்த்துவிட்டு ஒரு வர்ணனையாளரிடமிருந்து (யாரென்று நினைவில் இல்லை) வந்த கமெண்ட் , “He is a university of death bowling”. அப்படிப்பட்ட ஒருவரை அடுத்த வருடம் CSK தனது அணியின் bowling coach-ஆக இருத்திவைத்துக்கொண்டு அத்துணை அனுபவத்தையையும் அறிவையும் அடுத்தத் தலைமுறைக்குக் கடத்துவது என்பதும் நிர்வாகத்தின் திட்டமாக நிச்சயம் இருக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது.

அடுத்த ஆண்டின் காப்டன் பதவிக்கு (தோனி களத்தில் இல்லாத பட்சத்தில்) பரிசீலிக்கப்படும் பெயர்களில் ராபின் உத்தப்பாவின் பெயரை நிர்வாகம் சேர்த்துக்கொள்ள யோசிக்கலாம். சரியான வயதும் (36, இன்னும் ஓரிரு வருடங்கள் இருக்கலாம் அவர் ஓய்வு பெறுவதை பற்றி சிந்திப்பதற்கு), ஆழ்ந்த அனுபவமும், ஆடுகளத்தில் அவருடைய உடல்மொழியும், அவரிடமிருந்து வெளிப்படும் ஆட்டங்களை எதிர்கொள்ளும் attitude-ம், எல்லாவற்றிற்கும் மேலாக மற்ற வீரர்களிடமிருந்து மாறுபட்ட தோனியுடனான அவரது equation-ம், அவர் தகுதியான தேர்வாக இருக்கலாம் என்று எண்ண வைக்கின்றன. அவரும் கூட அடுத்த இளம் வீரரைக் காப்டன் பதவிக்குத் தயார்படுத்தும் வரை இருக்கும் ஒரு transition- interim காப்டனாகத்தான் செயல்படமுடியும் (வயது காரணத்தால்) என்றேத் தோன்றுகிறது. தற்போதைக்கு அது தான் CSK-விற்குத் தேவையென்றும் நினைக்கத் தோன்றுகிறது.
CSK எனும் அணி ஒரு சகாப்தத்திலிருந்து இன்னொரு சகாப்தத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறது. தராசின் இரு தட்டுகளில் தோனி ஒரு தட்டிலும் நிர்வாகம் ஒரு தட்டிலுமாக CSK அணி எனும் முள்ளை சமநிலையில் வைத்திருந்தனர் இத்தனை ஆண்டுகளாக.
இப்போது ஒரு தட்டில் கனம் இல்லாமல் போகும்போது தராசு தன் சமநிலையிலிருந்து ஊசலாடித்தான் நிற்கும். நாம் இப்போது பார்த்துக்கொண்டிருப்பது இந்த ஊசலாட்டங்கள் தான். தோனிக்கு சமமான தலைவனைத் தட்டில் இருத்த முடியாது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆகையால் தராசையே மாற்றுவது மட்டுமல்லாமல் கணிக்கும் அளவீடுகளையும் நிர்வாகம் மட்டுமல்ல, ரசிகர்களும் மாற்றிக்கொண்டுதான் ஆகவேண்டும்.

மஹேந்திர சிங் தோனி என்ற மாபெரும் கிரிக்கெட் legend இத்தனை வருடங்களாக CSK எனும் அணியை மட்டுமல்ல, CSK எனும் அணியின் ரசிகர்களையும் சேர்த்துதான் உருவாக்கி உள்ளார். வெற்றியையும், தோல்வியையும், டாஸ் போடும் காயினின் இருபக்கங்களைப் போல் பாவித்து, விளையாடி, வென்று, தோற்று, வழிநடத்தி செல்லும் ஒருவரைத் ‘தல’ என்று போற்றிக் கூத்தாடும் ரசிகர்கள், அவருடைய தாரக மந்திரமான வார்த்தைகள், “Take care of the steps and processes. The end will take care of itself” -ஐக் கொஞ்சமே கொஞ்சம் யோசித்து மனதில் இருத்தினால் போதும், இந்த ஊசலாட்டத்தை எளிதில் கடந்து விடலாம். CSK-யின் வெற்றிகளுக்கும், தோல்விகளிலிருந்தும், தடையிலிருந்தும் துள்ளி மீண்டெழுந்து வந்ததற்குமான அஸ்திவாரமானக் காரணம் CSK-யின் ரசிகர்கள். அப்படிப்பட்ட ரசிகர்கள் அவர்களுடைய ‘தல‘க்கு விடை கொடுத்து வழியனுப்பும் வருடம் இது(?). அவருடைய வார்த்தைகளைக் கடைபிடிப்பதை விட அவருக்கு வேறு எப்படி நம் அன்பை உரித்தாக்க முடியும்? So, let’s trust the process. The result will take care of itself.
–கா. தாஸ்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.