தினமும் ஒரு கீரை, இரண்டு பங்கு காய்கறிகள், ஒரு பங்கு பழங்கள், கொஞ்சம் நட்ஸ்… இப்படிச் சாப்பிடுவதுதான் பேலன்ஸ்டு டயட் என வலியுறுத்தப்படுகிறது. எத்தனை பேர் அதைப் பின்பற்றுகிறோம் என்பதுதான் கேள்வியே. ”காய்கறிகள், கீரைகள், நட்ஸ் சாப்பிடுவதைத் தவிர்ப்பதால் பாதிக்கப்படும் உறுப்புகளில் பிரதானமானவை கண்கள். பார்வைக்கான பிரதான பகுதியான விழித்திரைக்கு போதிய ஊட்டமில்லாவிட்டால், மெள்ள மெள்ள பார்வை குறைந்து, ஒரு கட்டத்தில் முற்றிலும் பறிபோகலாம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை மருத்துவர் வசுமதி வேதாந்தம்.
விழித்திரைக்கு போதுமான ஊட்டம் கிடைக்காததால் ஏற்படக்கூடிய முக்கியமான பிரச்னை குறித்தும், அதன் அறிகுறிகள், தீர்வுகள் குறித்தும் பேசுகிறார் அவர்.
”பாராஃபோவியல் டெலங்ஜியெடேசியா (Parafoveal Telangiectasia (PFT)… மருத்துவர்கள் மட்டுமே அறிந்த வார்த்தை இது. ரெட்டினா எனப்படும் விழித்திரைக்கு, போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் போவதால் ஏற்படும் பிரச்னை இது. நம் கண்கள்தான் கேமரா என்றால் கேமராவில் உள்ள ரோல் போன்றது விழித்திரை. அதன் மையப்பகுதியை மேகுலா என்போம். அந்த மேகுலாவின் மையப்பகுதிதான் ஃபோவியா.
அந்தப் பகுதியின் வழியேதான் நாம் படிக்கிறோம், எழுதுகிறோம். அதைச் சுற்றியுள்ள ரத்தக்குழாய்கள் சுருண்டுபோவதாலும், ரத்தம் கசிவதாலும், தழும்பாவதாலும் பார்வைத் திறன் குறையத் தொடங்கும். நேர்க்கோடுகள் எல்லாம் வளைந்ததுபோல தெரியும். இந்தப் பிரச்னை நீரிழிவுக்காரர்களுக்கு மிகவும் சகஜம். அதிலும் 40 வயதுக்கு மேலான பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.