கோவை, வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரோஷன் (18). இவர் தன் நண்பர்களுடன், சிறுவாணி சாலையையில் உள்ள ஒரு கிளப்பில் ஓணம் பண்டிகை கொண்டாடியிருக்கிறார். தொடர்ந்து, நேற்று இரவு அங்கு அனைவரும் தங்கியிருக்கின்றனர்.

இதனிடையே, கல்லூரி செல்வதற்காக இன்று அதிகாலை கிளப்பிலிருந்து அவர்கள் எடுத்து சென்றிருந்த உறவினர் காரில் வடவள்ளிக்குப் புறப்பட்டிருக்கின்றனர்.
காலை 6:15 மணியளவில் கார் போலுவாம்பட்டி – தொண்டாமுத்தூர் சாலையில் வேகமாக வந்திருக்கிறது. தென்னமநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே, வளைவில் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறியிருக்கின்றனர்.

இதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்த கார் பழனிச்சாமி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தின் இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு, உள்ளே 120 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்தது.
காரை ஓட்டிவந்த ரோஷன் மட்டும் கதவைத் திறந்து வெளியே வந்துவிட்டார். அவருடன் காரில் பயணம் செய்த, வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஆதர்ஷ்(18), ரவி (18), நந்தனன் (18) ஆகியோர் இறந்துவிட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.