சமீப காலமாக, மாரடைப்பால் இளம் வயதினர் இறக்கும் செய்திகளை அதிகமாகப் பார்க்க முடிகிறது. கோவிட் பெருந்தொற்று பாதிப்புக்குப் பின்னர் பலருக்கு இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறும் நிலையில், இத்தகைய மரணங்களுக்கான காரணம் புதிராகவே உள்ளது.
கடந்த மாதம் சென்னையில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், “கோவிட் சூழலுக்குப் பிறகு மாரடைப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, சர்க்கரைநோய், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பாதிப்பதற்கான வாய்ப்பு 4- 5% அதிகரித்துள்ளது” என்றார்.
மாரடைப்பு ஏற்படுவதற்கு கோவிட் தடுப்பூசி காரணமாக இருக்கலாமா என்று கோணத்திலும் பல்வேறு கேள்விகள் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டன. ஆனால் இதுபற்றிய எந்த ஆய்வோ, தகவலோ முறையாக இல்லை என்ற பதிலே அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.