சமீபத்தில், சென்னை தேனாம்பேட்டையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கோடைக்கால வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் மயக்கம், தலைவலி போன்ற பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், விழிப்புணர்வாகச் செயல்பட சில ஆலோசனைகளை வழங்கியதோடு, `கோடைக்காலத்தில் மது அருந்துவதை தவிர்த்துவிடுங்கள்’ என்றும் அறிவுறுத்தினார்.
கோடைக்காலத்தில் மது அருந்துவதால் அதிக பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரத்திடம் கேட்டோம்.
“கோடைக்காலம் என்றல்ல, மது அருந்துவதை எல்லா காலத்திலும் தவிர்ப்பது நல்லது. என்றாலும் கோடைக்காலத்தில் மது அருந்தக்கூடாது என்று வலியுறுத்திச் சொல்லப்படுவதற்கு சில காரணங்கள் உள்ளன. பெரும்பாலானோர், ’மது அல்லது பீர் சாப்பிட்டால் என்ன, அதுவும் தண்ணீர் போன்ற திரவம்தானே, நீர்ச்சத்துதானே?’ என்று நினைக்கிறார்கள். ஆனால் காக்டெயில் ஆகட்டும், பீர் ஆகட்டும், வைன் ஆகட்டும்… என்ன விதமான மது என்றாலும் அது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். கோடைக்காலங்களிலும் இதை உட்கொள்ளும்போது அது அதிகமான நீரிழப்பை ஏற்படுத்தும். அதுவும் முதியவர்கள், இதய நோய் உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் மது அருந்தும்போது அது பல பாதிப்புகளை உண்டாக்கும். உயிருக்கே கூட பாதிப்பாகும் நிலையை ஏற்படுத்தும்.