செல்போன் தொலைந்து போனதாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார் மனுக்களின் அடிப்படையில், விசாரணை நடத்தி சுமார் 405 செல்போன்கள் மீட்கப்பட்டன. அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் செல்போன்கள் காணாமல்போனதாகப் பதியப்பட்ட புகார்களின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, தற்போது 400-க்கும் மேற்பட்ட செல்போன்களை மீட்டிருக்கின்றனர். இதற்காகத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு செல்போன்களைக் கண்டுபிடித்த சைபர் க்ரைம் போலீஸாருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கன்னியாகுமரி, நெல்லை தூத்துக்குடி , தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கஞ்சா விற்பனையைத் தடுக்கும் வகையில், காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக தற்போது கஞ்சா விற்பனை குறைந்திருக்கிறது.

வெளிமாநிலங்களிலிருந்து கஞ்சா வருவதை தடுக்கும் வகையில் சோதனைச்சாவடிகளில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தூத்துக்குடியில் 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கஞ்சா விற்பனை தொடர்பாக முக்கிய குற்றவாளியைக் காவல்துறையினர் கைதுசெய்திருக்கிறார்கள். தற்போது பெரிய அளவில் கஞ்சா விற்பனை இல்லை. ஒரு சில பகுதிகளில் சிறிய அளவில் விற்பனை நடைபெறுவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதைத் தடுக்கும் வகையில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் ஏற்கெனவே ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மேலும் ஒரு நபரைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.வு-க்கு மிரட்டல் வந்ததன் அடிப்படையில், காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அந்த நபர்கள் கேரளாவில் தலைமறைவாக இருந்திருக்கின்றனர். கேரளாவிலிருந்து வந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். வி.ஏ.ஓ கொலை குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மணல் கடத்தல், கஞ்சா விற்பனை கும்பல்கள்மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் நெல்லை சரகத்தில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பொதுமக்கள் தெரியாத நபர்களிடமிருந்து பழைய செல்போன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அது குற்றச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட செல்போனாக இருக்கலாம். எனவே பழைய செல்போன்களை வாங்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்” என்றார். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் மாயமான செல்போன்கள் அதிக அளவில் மீட்கப்பட்டிருப்பதாகவும், செல்போன்களை தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் மீட்டுக் கொண்டு வந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.