மருந்துகள் கொடுக்கப்படும் போது, சிலருக்கு ஒருவித ஒவ்வாமை அல்லது வேறுசில அறிகுறிகள் ஏற்படுவதுண்டு. இப்படி ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கொண்ட பெண்ணின் நாக்கு கறுப்பாக மாறி, முடிகள் முளைத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜப்பானில், மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுடைய பெண், 14 மாதங்களுக்கு முன் சிகிச்சை எடுத்துள்ளார். இவருக்கு அளிக்கப்பட்ட கீமோதெரபியின் பாதக விளைவுகளைக் குறைக்க, முகப்பரு முதல் நிமோனியா வரை அனைத்திற்கும் சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மினோசைக்ளின் (minocycline) கொடுக்கப்பட்டுள்ளது.
சரும புண்களைத் தடுக்க, தினமும் 100 மி.கி அளவு மினோசைக்ளின் தொடர்ச்சியாக எடுத்துள்ளார். மருந்தின் விளைவால், இவரின் முகம் சாம்பல் நிறத்தில் (Grey) மாறியுள்ளது. சருமத்தின் நிறமும் மாறியது.
நோயாளியின் வாயில் வலிநிறைந்த கறுப்பு படலமும், சுவை மொட்டுகளைப் போல பழுப்பு நிறத்தில் முடியும் (Black Hairy Tongue -BHT) இருந்ததை மருத்துவர்கள் கண்டதும் அதிர்ந்து போயுள்ளனர்.
மினோசைக்ளின் ஆக்ஸிஜனேற்றப்படும்போது கறுப்பு நிறமாக மாறும் மற்றும் சரும நிறமாற்றத்திற்கு வழிவகுக்கும். இதனாலேயே இத்தகைய விளைவுகளை அவர் சந்திக்க நேர்ந்தது என்பதை அறிந்த மருத்துவர்கள், அவருக்குக் கொடுக்கப்பட்ட மருந்தை மாற்றினர். அதன்பின் ஆறு வாரங்களுக்குப் பிறகு அவருடைய முக நிறம் மற்றும் நாக்கும் ஓரளவுக்கு இயல்பாக மாறின என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் இந்தப் பிரச்னை குறித்த அறிக்கைகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.