தடுப்பூசி போடாமல் இருந்தால் என்னவாகும்… அல்லது கால தாமதம் செய்தால் சரியா?
தேசிய தடுப்பூசி அட்டவணை, செலுத்த வேண்டிய தடுப்பூசிகளையும் அது செலுத்தப்பட வேண்டிய காலகட்டத்தையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. தடுப்பூசி போடாமல்விடும் பட்சத்தில், குழந்தைகளை நாமே நோய்களுக்கு ஆளாக்கும் வாய்ப்பை உருவாக்குகிறோம். குறிப்பிட்ட நாளை விட, 2, 3 வாரங்கள் தள்ளிப் போவதால் தவறில்லை. ஆனால் பெற்றோரின் அலட்சியத்தால் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடாமல் விடுவது உகந்ததல்ல. குறிப்பிட்ட வயதில்தான் குறிப்பிட்ட தடுப்பூசியைச் செலுத்த வேண்டும்.
குறிப்பிட்ட வயதைக் கடந்து தடுப்பூசி செலுத்துவதால், பாதிப்புகள் ஏதும் ஏற்படப் போவதில்லை. ஆனால் குறிப்பிட்ட வயதிற்கு மேல் அதைச் செலுத்துவதால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலில் மாறுதல்களும், அதனால் எவ்வித பயனும் ஏற்படாது. தக்க சமயத்தில், சரியான தடுப்பூசியைச் செலுத்துவதே சரியானது. ரோட்டா வைரஸ் பொதுவாக மழலையர்களுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். இதற்கான தடுப்பூசி 6, 10, மற்றும் 14-ம் வாரங்களில் செலுத்தப்படும். ஒருவேளை அந்தத் தடுப்பூசி செலுத்துவதற்குத் தவறி விட்டால், 8 மாதங்களுக்குப் பிறகுச் செலுத்தப்பட மாட்டாது.
ஏனென்றால், 8 மாதத்திற்குப் பிறகு, ரோட்டா வைரஸ் நம் உடலைத் தாக்கினாலும், அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு நம் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருக்கும். ஆனால், நிமோனியா காய்ச்சல், தட்டம்மை, சின்னம்மை, டைபாய்டு காய்ச்சல் போன்ற சில நோய்களுக்கு மட்டும், குறிப்பிட்ட வயதைக் கடந்த பிறகும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அதனை, வரையறுக்கப்பட்ட வயதிற்குள் செலுத்திக் கொள்ள வேண்டும்.