உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, அது குறித்த விழிப்புணர்வு கட்டுரைகளை தினமும் விகடன் வெளியிட்டு வருகிறது. இதில், தாய்ப்பால் புகட்டுவதன் அவசியம், அது தொடர்பான சந்தேகங்களுக்கு மருத்துவர்களின் விளக்கங்கள், தாய்ப்பால் தானம் செய்வதன் தேவை குறித்த கட்டுரைகள் வெளியிடப்பட்டன.
அந்த வரிசையில் இன்று, தாய்ப்பால் புகட்டுவது தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு, மூத்த குழந்தைகள் நல மருத்துவர் சந்திரா பாக்கியநாதன் பதிலளிக்கிறார்…
ஆறு மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்று ஏன் சொல்லப்படுகிறது?
தாய்மார்களுக்கு 600 மில்லி முதல் 1000 மில்லி வரை ஒரு நாளைக்கு தாய்ப்பால் உற்பத்தி செய்யக்கூடிய திறன் உள்ளது. பருமனானவர், ஒல்லியானவர் என்றெல்லாம் எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து தாய்மார்களாலும் இந்த அளவுக்கு தாய்ப்பாலை உற்பத்தி செய்ய முடியும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான முக்கியப் புரதமான லாக்டால்புமின் (lactalbumin) தாய்ப்பாலில் உள்ளது. இது மாட்டுப்பால் போன்ற பிற மாற்றுப் பொருள்களில் இருக்காது.