மும்பையைச் சேர்ந்த ரிதா ஜோஷி என்பவருக்கு, 2018 செப்டம்பரில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். ஆனால் இக்குழந்தைகள் 30 வாரங்களிலேயே பிறந்திருக்கின்றனர். இந்தக் குழந்தைகளுக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது.
ஜோஷி, 2007-ல் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள இரண்டு காப்பீடுகளை எடுத்துள்ளார். தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் அதற்கான பிரீமியம் தொகையைச் செலுத்தி புதுப்பித்தும் வந்துள்ளார்.
இந்நிலையில் அவருடைய இரட்டைக் குழந்தைகளின் சிகிச்சைக்கு ஆன செலவு ரூ.11 லட்சத்தை கிளெய்ம் செய்ய காப்பீடு நிறுவனத்திடம் விண்ணப்பித்த போது, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான காப்பீடு குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்குப் பொருந்தாது எனக் கூறி கிளெய்ம் பணத்தை மறுத்துவிட்டது.
இதையடுத்து, ஜோஷி நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீதிமன்றத்தின் தரப்பில் மருத்துவர்களிடமும், காப்பீட்டு நிறுவனத்திடமும் விசாரணை செய்யப்பட்டது. குறை மாதத்தில் பிறந்ததால் குழந்தைகளின் நலனில் சிக்கல் வந்திருக்கலாம், சரியான காலத்தில் பிறந்திருந்தால் சிக்கல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியிருக்கின்றனர் மருத்துவர்கள்.