கும்பகோணத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர் குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்த கொத்தனார் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவரின் மனைவி மற்றும் உறவினர் குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம், திருவிடைமருதூர் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் தனபால்(32) மாற்றுத்திறனாளியான இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை வாய் பேசாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி. தனபால் நேற்று இரவு நரசிங்கம்பேட்டை கடைத்தெருவில் தனது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, டூவீலரில் அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள் தனபாலை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.