நன்றி குங்குமம் டாக்டர்
தினசரி குங்குமம் வைக்கும் பழக்கம் உள்ள பலருக்கும் சில பிராண்ட் குங்குமத்தில் உள்ள ரசாயணங்களால் அலர்ஜியாகி குங்குமம் வைக்கும் இடத்தில் புண்ணாகிவிடும். இந்தப் புண்ணை ஆற்றுவதற்கான சில எளிய வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.கடுக்காயை சந்தனக் கல்லில் உரைத்துத் தடவினால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தினசரி இரவு நேரத்தில் குங்குமம் வைக்கும் இடத்தில், தேங்காய் எண்ணெய்யை தடவி வர, புண் குணமாகி, தழும்பும் மறைந்து விடும். தினசரி இரவில் படுக்கும்முன், ஆலிவ் எண்ணெயை தடவி வந்தாலும், புண் விரைவில் ஆறிவிடும்.வில்வ மரத்துப் பட்டையுடன் சந்தனத்தை சேர்த்து இழைத்து தடவிட புண் குணமாகி, கருப்பு மறைய ஆரம்பிக்கும்.
மஞ்சள் சந்தனத்தை தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பூசி வந்தால் நாளடைவில் கருப்பு வந்த இடம் காணாமல் போய்விடும்.
தினசரி குங்கும தழும்பு உள்ள இடத்தில் கருந்துளசி சாறு தடவி வர, குணம் கிடைக்கும்.கடுக்காயை, அரிசி கழுவிய நீரில் உரைத்து, தடவி வர, அரிப்பு நிற்கும்
கடுக்காயை தயிர்விட்டு அரைத்து தடவிவிட, கருப்பு மறையும்.தினசரி குங்குமம் வைக்கும் முன் கலர் வேக்ஸ்-ஐ தடவிவிட்டு, பின் குங்குமம் வைக்க, அலர்ஜி ஏற்படாது.
நல்ல தரமான குங்குமத்தையே உபயோகிக்க சரும எரிச்சல், புண் ஆவது ஏற்படாது.
வறுத்து அரைத்த உளுந்து மாவோடு அரை தேக்கரண்டி கடலைமாவு கலந்து தடவ, நெற்றியில் குங்குமம் வைத்ததினால் ஏற்படும் அலர்ஜி, தடிப்பு, கருமை நீங்கும்.
துளசி இலையை தேங்காய்ப் பால் விட்டு அரைத்து அந்த விழுதைப் பூசி வந்தாலும், குங்குமத் தழும்பு மாறும்.வாசலின் சிறிது அளவு குங்குமம் வைக்கும் இடத்தில் தடவிவிட்டு, பின்னர், குங்குமம் வைத்துக் கொள்ள கருமை ஏற்படாது.மேலே உள்ள சிகிச்சை முறைகள் செய்தும் பலன் கிடைக்காமல், கடுமையான, தீர்க்க இயலாத கருந்திட்டு இருந்தால், நல்ல தோல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று மருந்துகள் எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.
தொகுப்பு : சுப்பிரமணியன்