2. கைப்பன எல்லாம் கடை, தலை தித்திப்ப,
மெச்சும் வகையால் ஒழிந்த இடை ஆக,
துய்க்க, முறை வகையால், ஊண் – (பாடல் 25)
கருத்துரை
உணவில் உள்ள இனிப்பான பண்டங்கள் மற்றும் கறிகளை முதலிலும், கசப்பு சுவையுடைய பண்டங்களை இறுதியிலும், மற்ற சுவைகளைக் கொண்ட உணவுகளை இடையிலும் உண்ண வேண்டும்.
மருத்துவரின் விளக்கம்
நாம் உண்ணும் உணவில் அறுசுவை கூறுகளும் இருப்பது மிகவும் அவசியம். இனிப்புப் பண்டங்களை முதலில் எடுத்துக்கொள்ளும்போது உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கும், செரிமானம் தூண்டப்படும். இந்தச் செயல்கள் உண்ட உணவு நன்கு செரிமானமாகி அடுத்த வேளை பசியெடுக்க உதவும். கசப்பான பொருள்களை உண்ட பிறகு மற்ற பொருள்களை உண்ணுவது சிரமம். ஆதலால் கசப்புச் சுவையை கடைசியில் உண்ண வேண்டும். இதற்கிடையில் மற்ற புளிப்பு, துவர்ப்பு மற்றும் உவர்ப்பு சுவையுடைய பொருள்களை உண்ணலாம்.
காலை உணவு என்பது அந்த நாளில் உடல் இயங்குவதற்கான சக்தியை அளிக்கக்கூடிய மூலப்பொருள். இரவு உணவு முடிந்து தோராயமாக 7 மணி நேர உறக்கத்துக்குப் பின் காலை உணவை எடுத்துக்கொள்ளத் தயாராகிறோம். இந்த, நீண்ட இடைவெளிக்குப் பின் உடல் இயங்க ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே, நமது சீரண உறுப்புகள் உணவைப் பெற்று ஜீரணித்து சக்தியை உடலுக்கு அளிக்கத் தயாராக இருக்கும். மேலும் உடலுறுப்புகள் மற்றும் மூளை இயங்க குளுக்கோஸ் மிகவும் அவசியம். இந்தக் குளுக்கோஸ் காலை உணவிலிருந்து உடலால் உட்கிரகிக்கப்படும். ஒருவேளை காலை உணவைச் சாப்பிடாமல் விட்டால், மூளை தனது ஆற்றலை இழந்து சோர்வடையும்.