மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். மழைக்காலத்தில் கூடுதல் கவனம் அவசியம். `மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநர் பலி’ , ‘வீட்டின் கதவுகளில் மின் கசிவு ஏற்பட்டதை கவனிக்காமல், கதவுகளைத் திறந்தவர் பலி’ போன்ற பல செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். மழை நேரத்தில் மின்சார விஷயத்தில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்…?என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற தகவல்களை வழங்குகிறார் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மின்சார வாரிய ஊழியர் ஷேக் தாவுத்…
“வீடுகளில் மின்சார இணைப்பு கொடுக்கும்போது, தானாகவே ட்ரிப் ஆகக்கூடிய கருவி இணைப்பது நல்லது. இதன் மூலம் திடீரென அதிகமாக மின்சாரம் பாய்ந்தாலோ அல்லது ஷார்ட் சர்க்யூட் ஆகும் போதோ, தானாக ட்ரிப் ஆகி மின்சாதனங்களைப் பாதுகாக்க முடியும். அதேபோல், வீடுகளில் கண்டிப்பாக எர்த் கனெக்ஷன் அவசியம்.
எக்காரணம் கொண்டும், உடைந்த சுவிட்சுகள், பிளக் பாயின்ட்களை பயன்படுத்தாதீர்கள். கிரைண்டர், மிக்ஸி, ஃப்ரிட்ஜ் என ஒவ்வொரு மின்சாதனத்திற்கும் தனித்தனி பிளக் பாயின்ட் இருப்பது நல்லது.
வயர்கள் தேய்மானம் அடையும் போது, அவற்றின் மூலம் மின்கசிவு ஏற்படும். வயரிங்க்கான பொருள்களை வாங்கும் போது சிக்கனம் பார்க்காமல், தரமான பொருள்களைத் தேர்வு செய்து வாங்குங்கள்.
மின்சாதனங்கள் மற்றும் மின் இணைப்புக்கான பொருள்கள் வாங்கும் போது ஐ.எஸ்.ஐ முத்திரை பதித்த தரமான பொருள்களைத் தேர்வு செய்து வாங்குவது நல்லது.
வீடுகளில் மின்சார வயரிங் வேலை செய்யும் போது அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்ததாரர் மூலமாக மட்டும் செய்யுங்கள். வயரிங் வேலை செய்த பிறகு ஒருமுறைக்கு இருமுறை பாதுகாப்பு கருவிகள் கொண்டு, மின் இணைப்பு சரியாக உள்ளதா என்று செக் செய்து கொள்ளுங்கள்.