எல்லா வகையான உணவுப் பொருள்களுக்கும் காலாவதி தேதி உண்டு என்பது நமக்குத் தெரியும். அதேபோல, நாம் உட்கொள்கின்ற மருந்து, மாத்திரைகளுக்கும் காலாவதியாகும் தேதி இருக்கிறது. காலாவதியான மாத்திரைகளை உட்கொள்வதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும், காலாவதியான மருந்துகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது எப்படி என்பது பற்றி கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அஷ்வின் கருப்பன்.
பக்க விளைவுகள் வரலாம்!
மாத்திரை காலாவதியானால், அதன் செயல்திறன் குறையும். உதாரணத்திற்கு ஓர் ஊசி, குறிப்பிட்டநாள் வரைதான் இருக்கும். அதன்பிறகு காலாவதியானால், அது வேலை செய்யும் திறனை இழந்துவிடும். இரண்டாவது, மாத்திரையின் தன்மை மாறும்போது, அது கெடுதலை விளைவிக்கும். உதாரணத்திற்கு சர்க்கரை நோய்க்கான மாத்திரையை காலாவதியான பின் உட்கொண்டால், சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது, நிலைமை மோசமாகலாம்.
பொதுவாக, ஒரு மாத்திரை காலாவதியாகாமல் தடுக்க, முக்கியமான ஒரு மூலக்கூறு இருக்கும். அதுதான் செயலிழக்கும். இதனால், பல பக்க விளைவுகள் வரலாம். சிலருக்கு ஒவ்வாமை, அரிப்பு வரலாம். மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு, வலிப்புகூட வர வாய்ப்புகள் உள்ளன. எனவே, காலாவதியான மாத்திரைகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.