காமன்வெல்த் டூ பாரீஸ் ஒலிம்பிக் – மனம் திறக்கிறார் தங்கம் வென்ற தினக் கூலித் தொழிலாளி மகன் எல்டோஸ் | Triple jumper Eldhose Paul tells his commonwealth games experience

Share

பிரிட்டனின் பழமையான நகரங்களில் ஒன்றான பர்மிங்ஹாமில்தான் இந்த முறை 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் அரங்கேறின. இங்கிலாந்தின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றான பர்மிங்ஹாமில் நவீனமான முறையில் கட்டமைக்கப்பட்ட அலெக்சாண்டர் மைதானத்தில் நடந்த தடகளப் போட்டிகளின்போது கடந்த வாரம் இந்திய ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது. இந்திய வீரர், வீராங்கனைகள் அதிகம் சோபிக்காமல் போன மும்முறைத் தாண்டுதல் (டிரிப்பிள் ஜம்ப்) விளையாட்டில் தங்கம் வென்று ஊடக வெளிச்சத்தை தன்பக்கம் பாய்ச்ச செய்தார் எல்டோஸ் பால். கேரள மாநிலத்தைச் சேர்ந்த தினக் கூலிதொழிலாளியான கொச்சுத்தோட்டத்தில் பவுலோஸின் மகனாக பிறந்து உலக தடகள வீரர்கள் வரிசைக்கு உயர்ந்துள்ளார் எல்டோஸ் பால்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் டிரிப்பிள் ஜம்ப்பில் 17.03 மீட்டர் தாண்டி முதலிடத்தைப் பிடித்து தங்கத்தை தனதாக்கினார் எல்டோஸ் பால். அதைத் தொடர்ந்து 17.02 மீட்டர் தாண்டி வெள்ளியை வென்றார் மற்றொரு இந்திய வீரர் அபுபக்கர். இது ஓர் அரிய சாதனையாகும். அறிமுக காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றபோது இந்த சாதனை அவருக்கு எளிதில் கிட்டவில்லை. ஏழ்மை, போதிய பயிற்சி கிடைக்காமல் அவதிப்பட்டது, பயிற்சியாளர் கிடைக்காதது என பல தடைக் கற்களைத் தாண்டித்தான் இந்த நிலையை அவர் எட்டியுள்ளார்.

தங்கம் வென்றது குறித்து மனம் திறந்து பேசும்போது, “கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கஜகஸ்தான் போட்டிதான் மிகுந்த சவாலை அளித்தது. உறையவைக்கும் கடும் குளிரைச் சமாளித்து வெள்ளியைக் கைப்பற்றினேன். டிரிப்பிள் ஜம்ப்பில் 17 மீட்டர் தூரத்தை எட்டி அந்தத் தடையை உடைக்க வேண்டும் என்ற உறுதியில் இருந்தேன். கடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி, கஜகஸ்தான் போட்டியில் கூட 17 மீட்டர் தூரத்தை எட்டவில்லை. கடும் பயிற்சி, விடா முயற்சி, உறுதியான எண்ணத்தின் மூலம் அதை ஈடேற்றினேன்” என்றார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள சிறிய கிராமம்தான் எல்டோஸ் பாலின் சொந்த ஊராகும். இவரது தந்தையான கொச்சுத்தோட்டத்தில் பவுலோஸ் அங்கு தினக்கூலியாக பணிபுரிந்து வருகிறார். தினக்கூலியாக இருந்தபோதும் தன் மகனை சாம்பியனாக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டு கொண்டிருந்தார். நாம் கூலித் தொழில் செய்தாலும் பரவாயில்லை…மகன் விளையாட்டில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு அவரது கண்களில் உழன்று கொண்டே இருந்தது.

இரவு வேளைகளில் மட்டுமே மகனை பார்க்க முடியும் அந்தத் தந்தைக்கு. மகனைப் பார்க்கும் போதெல்லாம் எப்படியாவது விளையாட்டில் சாதித்துவிடு. கூலித் தொழிலாளியாக இருந்தாலும் மகனைச் சாம்பியனாக்கினான் பவுலோஸ் என்ற பெருமையாவது எனக்குக் கிடைக்கட்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பாராம்.

இதோ…தந்தையின் கனவை நிறைவேற்றி விட்ட சந்தோஷத்தில் இருக்கிறார் எல்டோஸ்.

“இந்தியாவில் சாதிக்கும் ஒவ்வொரு தடகள வீரருமே ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர்கள்தான். ஏழ்மைதான் எங்களை சாதிக்க வைத்தது. இந்த ஏழ்மைதான் என்னை தங்கப் பதக்க ஏணியில் ஏறவைத்தது.

நான் ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்ததைப் பற்றி ஒருபோதும் வருத்தப்படவில்லை, இது ஒரு பிரச்சினை என்று எனக்குத் தெரியும். அதை நான்தான் சமாளிக்க வேண்டும். எனக்குப் பயிற்சியளித்த பயிற்சியாளர் டி.பி. அவுசேப்பின் பணியை இங்கு நான் சொல்லியே ஆகவேண்டும். நான் தொடக்கத்தில் 13.4 மீட்டர் தூரம் வரைதான் தாண்டிக் கொண்டு இருந்தேன். பிறகு என் பயிற்சியில் சில மாற்றங்களை டி.பி. அவுசேப் கொண்டு வந்தார். களிமண்ணாக இருந்த என்னைச் செதுக்கி சிற்பமாக்கியவர் அவர்தான். அவருக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அவரைத் தொடர்ந்து வெளிநாட்டுப் பயிற்சியாளர் பெட்ரோஸ் பெட்ரோசியன் உள்ளிட்டோருக்கும் எனது நன்றி” என்கிறார் எல்டோஸ்.

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றாலும் எல்டோஸின் கனவும் முடியவில்லை. அவரது பயணமும் முடிவுறவில்லை. அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பதக்க மேடையில் நிற்பதுதான் அவரது கனவு. 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறும் வரை எனது ஓட்டம் நிற்காது என்கிறார் எல்டோஸ் உறுதியுடன்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com