அவர் , “அபிநயாவிற்குச் சின்ன வயதிலிருந்து காது வலி இருந்தது. அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வாள். ஆனால், ஒரு கட்டத்தில் காது வலி தீவிரமடைந்ததால் நிரந்தரத் தீர்வுக்காகச் சிகிச்சை எடுக்க முடிவு செய்தோம். தெரிந்தவர்கள் பரிந்துரையின் அடிப்படையில், பிரசாத் மருத்துவமனையை அணுகினோம்.
அங்கு, பிப்ரவரி 14-ம் தேதி அபிநயாவுக்கு ரத்தம் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் எடுத்த பின், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மாலை 4 மணி முதல், 7 30 மணி வரை அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை முடிந்ததும் அபியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. இரவு 1. 30 மணியளவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவ உதவிகள் கொடுத்த போதும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. பிரசாத் மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லாததால் மறுநாள் சுகம் மருத்துவமனையில் அபிநயாவை சேர்த்தோம்.
அங்கு கொடுத்த மருத்துவ உதவியினாலும் அவள் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அபிநயா, மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். அங்குள்ள மருத்துவர் அபிக்கு சிறுநீரகம் வேலை செய்யவில்லை, இதற்கு முன்னரே எடுக்கப்பட்ட சிகிச்சையின் காரணமாக இவ்வாறு நேர்ந்திருக்கலாம் என்றனர்.
ஒவ்வோர் உறுப்பாகச் செயலிழக்கத் தொடங்கி, அபி உயிரிழந்தது இன்னும் என் கண் முன்னே நிற்கிறது. அவளுக்குக் காது வலியைத் தவிர எந்த பிரச்னையும் இல்லை. அப்படியிருக்க 16 வயதுக் குழந்தைக்கு எப்படி திடீரென்று இவ்வாறு நடக்கும் என்பது எங்களுக்கு இதுவரை புரியவில்லை. அறுவை சிகிச்சையில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. அபிநயாவை நினைத்து அவள் அம்மா புலம்பி அழுதுகொண்டே இருக்கிறார். சாப்பாடு கூட ஒழுங்காகச் சாப்பிடவில்லை. எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை” என்று வருத்தப்பட்டார்.