2014-லிருந்து மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியை விமர்சித்து, காங்கிரஸ் கட்சியானது டெல்லியில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், பாஜக-வின் தேசிய செய்தித் தொடர்பாளரும், எம்.பி-யுமான சுதன்ஷு திரிவேதி, `காங்கிரஸ் தன்னுடைய தொலைநோக்கு பார்வையை இழந்துவிட்டது’ எனக் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், காங்கிரஸின் அறிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த திரிவேதி, “முதன்முறையாக இந்தியாவில், பாதுகாப்புத்துறையில் முழுமையான சுயசார்பு உள்ளது. இந்த வளர்ச்சியைக் காணமுடியவில்லையென்றால், தவறு அவர்களின் கண்களில் தான். ஆனால், காங்கிரஸ் தன்னுடைய தொலைநோக்கு பார்வையையும், சிந்தனையையும் இழந்துவிட்டது.
இன்றைய உலகில், பெரும் சவாலான பொருளாதார நிலை தான் உள்ளன. ஆனாலும், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் திறமையான கொள்கைகளால், நம்முடைய வளர்ச்சி விகிதமானது, பணவீக்க விகிதத்தை விடவும் அதிகமாகவே உள்ளது. இது, நம்முடைய அண்டை நாடுகளாக இருந்தாலும் சரி, ஐரோப்பாவாக இருந்தாலும் சரி அல்லது அமெரிக்காவாக இருந்தாலும் கூட சரி, அங்கெல்லாம் பணவீக்க விகிதமானது இரட்டை இலக்கத்தில் அல்லது மிக அதிகமாகக் கூட உள்ளது. ஆனால் இந்தியாவில், வளர்ச்சி விகிதம் 8.5 சதவீதமாகவும், பணவீக்க விகிதம் 7.5 சதவீதமாகவும் உள்ளது” எனக் கூறினார்.