தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, `மசோதா நிறுத்திவைக்கப்பட்டாலே நிராகரிக்கப்பட்டதாகத்தான் அர்த்தம்’ எனக் கடந்த வாரம், ராஜ் பவனில் மாணவர்களிடம் கூறியிருந்தார். இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், ஆளுநருக்கெதிராக சட்டமன்றத்தில் நேற்று காலை தனித் தீர்மானம் கொண்டுவந்தார். அதைத் தொடர்ந்து நேற்று மாலையே, அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, மசோதா நிறுத்திவைக்கப்பட்டால் நிராகரிக்கப்பட்டதாகத்தான் அர்த்தம் என அரசியலமைப்புச் சட்டம் கூறுவதாகவும், காங்கிரஸுடனான சகவாசம் ஸ்டாலினின் அரசியல் சட்ட விசுவாசத்தை விழுங்கிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து நாராயணன் திருப்பதி தன் ட்விட்டர் பக்கத்தில், “ `Withhold என்றால் நிராகரிக்கப்பட்டதாகப் பொருள் என விதண்டாவாதமாகப் பேசும் ஆளுநர், அரசின் கொள்கைகளை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை, சட்டமன்றத்தின் இறையாண்மையைக் கொச்சைப்படுத்திப் பேசுகிறார். ஆளுநரின் அரசியல் சட்ட விசுவாசத்தை… அரசியல் விசுவாசம் விழுங்கிவிட்டது. ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், மாண்புமிகு குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.