கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் வழிகள் என்ன?
கல்லீரல் பாதிப்படைவதற்கு முக்கியமான காரணமே மதுபானம்தான். அதோடு ஆரோக்கியமில்லாத உணவு வகைகள், தேவையற்ற மருந்துகள் உட்கொள்வது, நீரிழிவு நோய், உடலின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளாமை, அதிகப்படியான கொலஸ்ட்ரால், உடல்பருமன், தற்போதைய வாழ்க்கைமுறை ஆகியவையும் கல்லீரலில் பாதிப்புகள் ஏற்பட காரணமாக இருக்கின்றன.
எனவே, மதுப்பழக்கம் தவிர்த்தல், குறைந்த அளவில் கார்போஹைட்ரேட்ஸ் உணவை உட்கொள்ளுதல், தேவையில்லாத நாட்டு மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்த்தல், தினமும் உடற்பயிற்சி செய்தல் ஆகியவை மிகவும் முக்கியம். இதனால் கல்லீரல் பகுதியில் கொழுப்பு சேர்வதைத் தவிர்க்க இயலும்.
லிவிங் டோனர் அறுவைசிகிச்சை பாதுகாப்பானதா?
லிவிங் டோனர்கான அறுவை சிகிச்சை, 100 சதவிகிதம் பாதுகாப்பானது. இந்தியாவில் மட்டுமன்றி பிற நாடுகளிலும் 1000-க்கும் மேற்பட்ட டோனர் அறுவைசிகிச்சைகள் நடைபெறுகின்றன. கல்லீரல் கொடை வழங்கும் டோனரை தேர்ந்தெடுக்கும் முன் அவருக்குப் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். குறுகிய காலத்திலோ, இல்லை எதிர்காலத்திலோ அவருக்கு இதனால் எந்தவித பின் விளைவும் ஏற்படாது என்று உறுதி செய்த பிறகுதான் அவரின் கல்லீரல் தானமாகப் பெறப்படும்.
முன்பெல்லாம் ஓப்பன் சர்ஜரி மூலம்தான் கல்லீரலின் ஒரு பகுதி அகற்றப்படும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக லேப்ராஸ் கோப்பி அல்லது ரொபோட்டிக் கருவி பயன்படுத்தி கல்லீரல் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் எளிதில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடிகிறது, அதோடு வலியும் குறைவாகவே காணப்படுகிறது. சிறு தழும்பு மட்டுமே வெளிப்புறத்தில் தெரியும் வகையில் இந்தச் சிகிச்சை முறை இருக்கிறது. அதோடு அறுவைசிகிச்சை செய்த டோனார் மூன்றில் இருந்து நான்கு நாள்களுக்குள்ளேயே வீட்டுக்குத் திரும்பும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் அறுவை சிகிச்சையை மிகவும் எளிதாக மாற்றியிருக்கிறது.