சென்னை கலாஷேத்ரா கல்லூரியில், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் நடன ஆசிரியர் ஹரி பத்மன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தமிழக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவியும், நடிகையுமான `பிக் பாஸ்’ அபிராமி ஹரி பத்மன் மீதான குற்றச்சாட்டில் அரசியல் சூழ்ச்சி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கலாஷேத்ரா கல்லூரியில் நான் படித்தபோது எனக்கு எந்தப் பாலியல் தொல்லையும் இருந்ததில்லை.
நான் படித்தபோது இயக்குநராக இருந்த லீலா சாம்சன் மீதும் இதுபோல பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள். அப்போதும் மாணவர்களிடம் பேசி, அழுது, கட்டாயப்படுத்தி லீலா சாம்சன் மீதான குற்றச்சாட்டுக் கடிதத்தில் கையெழுத்து வாங்கினார்கள். ஆனால், அந்தச் சூழ்ச்சியை லீலா சாம்சன் தைரியமாக எதிர்கொண்டு வென்று நிரூபித்தார். அதே போன்ற சூழ்ச்சிதான் இப்போதும் நடக்கிறது. சமீபத்தில் நடன ஆசிரியர் ஹரி பத்மனிடம் இந்தக் கல்லூரியை முன்னெடுத்துச் செல்லுமாறு ஓய்வுபெற்ற கலாஷேத்ரா பேராசிரியர் ஜனார்தனன் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகே ஹரி பத்மன் மீதான இந்தக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதனால், இதை அதிகாரத்துக்காகச் செய்யப்படும் சூழ்ச்சியாகவே பார்க்கிறேன்.