தேசிய அளவில் கரூர் மாவட்டத்தில் முதன்முறையாக `உதிரம் உயர்த்துவோம்’ திட்டத்தின் கீழ், வளர் இளம் பெண்களுக்கு ரத்த சோகை கண்டறியும் ஆய்வுகள் நடத்தப்பட்டு, தேவைப்படுவோருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டம் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கையேட்டை, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வெளியிட்டார். பின்னர் அது குறித்த சிறப்பம்சங்களை பகிர்ந்தார்.
மாவட்ட ஆட்சியர் தன் உரையில், “இந்தியாவிலேயே முதன்முறையாக கரூர் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும், பள்ளி செல்லும் வளர் இளம் பெண்களிடையே ரத்த சோகை நோயை கண்டறிந்து குணப்படுத்த, `உதிரம் உயர்த்துவோம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
கரூர் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் பெற்றோர்களுடன் கூட்டங்கள் மற்றும் பயிலரங்கங்கள் நடத்தப்பட்டு, விரிவான திட்டமிடலுக்குப் பிறகு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு உள்ளது.